காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர் ராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 5ம் தேதி தெலங்கானா மாநிலம் சிர்சில்லாவில் பி.எஸ்.ஆர். தலைவர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை “நாய்களின் மகன்கள்” என்று குறிப்பிட்டார். மேலும் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.500 போனஸ் வழங்காவிட்டால் காங்கிரஸ் தலைவர்கள் தொண்டையை கடிக்க நேரிடும் என்றும் தெரிவித்தார். சந்திரசேகர ராவின் இந்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சந்திரசேகர ராவ் பேச்சுக்கள் தொடர்பாக முன்னதாகவே பல்வேறு அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வழங்கியிருந்த நிலையில், மீண்டும் அவர் சர்ச்சையை கிளப்பியது, ஆணையத்தின் நடவடிக்கைக்கு வித்திட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தெலங்கானா மாநிலம் காங்கிரஸ் கமிட்டியின் மூத்த துணை தலைவர் ஜி. நிரஞ்சனிடம் இருந்து ஏப்ரல் 6 அன்று தேர்தல் ஆணையம் விரிவான புகார் ஒன்றை பெற்றது. அதில் கே. சந்திரசேகர் ராவ் சிர்சில்லாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மோசமான, இழிவான மற்றும் ஆட்சேபனைக்குரிய வகையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியினர் புகார் தொடர்பாக ஏப்ரல் 18ம் தேதி (நாளை) காலை 11 மணிக்குள் தனது நிலைப்பாட்டை விளக்குமாறு சந்திரசேகர ராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் அவரிடமிருந்து பதில் வரவில்லை என்றால், ஆணையத்தின் உரிய நடவடிக்கைக்கு சந்திரசேகர ராவ் ஆளாக நேரிடும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.