துபாய் பெருமழைக்கு ‘மேக விதைப்பு’ காரணமா? – ஒரு தெளிவுப் பார்வை

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால் மேக வெடிப்பு சமீப காலங்களாக அனைவருக்கும் பரிச்சயமான ஒரு பதமாகிவிட்டது. அதேபோல் ‘மேக விதைப்பு’ பற்றியும், அதன் எதிர்மறை விளைவுகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள பெய்யென பெய்துள்ளது துபாய் பெருமழை.

உலகின் மிக வெப்பமான, வறட்சியான பகுதிகளில் ஒன்று யுஏஇ என்ற ஐக்கிய அரபு அமீரகம். கோடையில் அங்கே 50 டிகிரி வெயில் அடிப்பது இயல்பு. ஆண்டு சராசரி மழையளவே 200 மில்லிமீட்டருக்கும் குறைவுதான். ஆனால், அந்த நாட்டின் பிரம்மாண்ட நகரமான துபாயில் நேற்று (ஏப்.16) திடீரென கொட்டித் தீர்த்த பெருமழையால் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் கடல் போல் மழை நீர் சூழ்ந்தது.

குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. சில மணி நேரங்களில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பெய்யக் கூடிய மழை பெய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. காலநிலை மாற்றத்தின் விளைவு காரணமாகத்தான் வறண்ட பகுதியில் இப்படியொரு மழை பெய்துள்ளதாக பேசப்படுகிறது. அரேபிய தீபகற்ப பகுதியைக் கடந்து சென்ற மிகப் பெரிய புயலே இந்த பெருமழைக்குக் காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புதிய சர்ச்சையாக மேக விதைப்பு தான் காரணம் என்ற கருத்துகள் எழுந்து வருகின்றன.

மேத விதைப்பு காரணமா? – இந்த திடீர் பெருமழையை மேக விதைப்பு என்ற செயற்கை மழையை உருவாக்குவதற்கான நடைமுறையே தூண்டியிருப்பதாக நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர். ‘கிளவுட் சீடிங்’ (cloud seeding) எனப்படும் மேக விதைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முன்னோடி நாடுகளில் அமீரகமும் ஒன்று. இந்த முறையைப் பயன்படுத்தி ஆண்டுக்கு பாரசீக வளைகுடாவில் ஆண்டுக்கு சராசரியாக 100 மில்லி மீட்டர் மழைப் பொழிவு தூண்டப்படுகிறது. அதிகரிக்கும் மக்கள் தொகையின் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 1982-ஆம் ஆண்டு முதல் மேக விதைப்பு முறையால் செயற்கை மழையை பெய்ய வைப்பது நடைமுறையில் உள்ளது. 2000-ஆம் ஆண்டு தொடங்கி அதன் இந்த முயற்சி அமெரிக்காவின் கொலராடாவில் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையம், தென் ஆப்பிரிக்காவின் விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகம், நாசா ஆகியனவற்றுடனான ஒத்துழைப்புடன் வேகமெடுத்தது. இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் மழை மேம்பாட்டுத் திட்டமானது (UAE’s Rain Enhancement Program – UAEREP) தேசிய வானிலை மையத்தின் வழிகாட்டுதலின்படியே நடத்தப்படுகிறது.

யுஏஇ தவிர சவுதி அரேபியா, ஓமன் போன்ற நாடுகளும் செயற்கை மழையை ஏற்படுத்த கிளவுட் சீடிங் முறையை பின்பற்றுகின்றனர். இந்தியாவில் குளிர் கால தொடக்கத்தில் வட இந்தியப் பகுதிகளில் ஏற்படும் காற்று மாசைக் கட்டுப்படுத்த இத்தகைய செயற்கை மழையை சில முறை வரவழைத்துள்ளனர்.

கிளவுட் சீடிங் அல்லது செயற்கை மழை என்றால் என்ன? – கிளவுட் சீடிங் (cloud seeding) அல்லது மேக விதைத்தல் என்பது செயற்கையாக மழையை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு வகை வானிலைத் திருத்தத் தொழில்நுட்பம். இதற்கு ஹெலிகாப்டர்கள் மூலம் சில வேதிப் பொருட்களை மேகங்களில் விதைக்க வேண்டும்.

மழை பெய்ய முதலில் காற்றில் அழுத்தம் வேண்டும். ஆகையால் காற்றழுத்ததை உருவாக்கி மேகங்களை ஒன்றுசேர்த்து அவற்றை குளிர்வித்து மழை பெய்ய வைக்கப்படுகிறது. இதற்கு சில்வர் ஐயோடைட் அல்லது பொட்டாசியம் ஐயோடைட் வேதிக் கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை ஹெலிகாப்டர் மூலம் மேகத்தில் தூவுவார்கள். இவை நீரை ஆவியாக்க உந்தும். இதன்மூலம் மழைத்துளிகள் உருவாகும். மேகங்கள் கூடி மழை பொழியும். யுஏஇ Beechcraft King Air C90 ரக லகு ரக விமானத்தை மேகவிதைப்புக்குப் பயன்படுத்துகிறது.

என்னதான் மேக விதைப்பு செயற்கையானது என்றாலும் கூட அதனை செயல்படுத்த கொஞ்சமேனும் ஈரத்தன்மை கொண்ட மேகங்களும் அதற்குச் சாதகமாக காற்றின் சுழற்சியும் தேவை. வறட்சியான பகுதிகளில் மழைப் பொழிவை ஏற்படுத்தவே மேக விதைப்பு பயன்படுத்துகிறது. வேளாண்மை, சுற்றுச்சூழல், நீர் மேலாண்மைக்கு மழை அவசியம். அதனை எதிர்கொள்ள மேகவெடிப்பு நிகழ்த்தப்படுகிறது.

மேக வெடிப்பு எப்படி வேலை செய்கிறது? – மேகங்கள் என்றால் என்னவென்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மேகங்கள் நீர்த்துளிகள் அல்லது பனிப் படிகங்களால் ஆனவை. காற்றில் உள்ள தூசி அல்லது உப்புக்களை சுற்றியுள்ள நீர் ஆவியானது அவற்றை அழுத்தும் போது நீர்த்துளிகளோ, பனிப் படிகங்களோ உருவாகும்.

மேக விதைப்பின்போது சில்வர் ஐயோடைட் போன்ற வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு மேகங்களுக்குள் பனிப் படிகங்கள் உருவாதல் செயற்கையாக செய்யப்படுகிறது. இதன்மூலம் மழை பொழிகிறது. மேக விதைப்புக்கு விமானங்கள் பயன்படுத்தக் கூடாது. அதனாலேயே சற்று வேகம் குறைந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மேக விதைப்பால் திடீர் பெருமழை ஏற்படுமா? – செயற்கை மழைக்காக மேக விதைப்பு மேற்கொள்ளப்பட்டாலும், அதில் சில பக்கவாட்டு சேதாரங்கள் இருப்பதாகவே நிபுணர்கள் கூறுகின்றனர். மேக விதைப்பால் ஒரு பகுதியில் பெய்ய வேண்டிய மழை வேறு பக்கத்துக்கு மடைமாற்றப்படலாம். இதனால் ஏதோ ஒரு பகுதியில் வறட்சி ஏற்படலாம். மேக விதைப்பு செய்யும்போது ஒருவேளை பெருமழை ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ளத் தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் போகலாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓமனில் ஏற்பட்ட பெருமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். ஓமனும் பல காலமாக மேக விதைப்பு முறையை பயன்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஓமன் உயிரிழப்பு திடீர் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்டிருந்தாலும் கூட அரசாங்கத்தின் மேக விதைப்பு பற்றிய முன்கூட்டிய எச்சரிக்கையை அசட்டை செய்த மனித தவறும் இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

மேக விதைப்புக்கு பயன்படுத்தப்படும் சில்வர் ஐயோடைட் வேதிப் பொருளால் சூழல் மண்டலத்தில் நீண்ட கால தாக்கம் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இந்த முறையால் சமுத்திரங்களில் அமிலத்தன்மை அதிகரிக்கக்கூடும். ஓசோன் மண்டலத்தில் ஓட்டைகள் விழலாம் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரிக்கலாம். வெள்ளி என்பது கனமான, நச்சுத் தன்மை மிகுந்த வேதிப் பொருள் என்பதால் அதனால் செடிகள், விலங்குகள், மனிதர்கள் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

துபாயில் தற்போது வரலாறு காணாத புயல், பெருமழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் இயற்கையை சீண்டினால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும் என்றும் சூழலியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நானோ துகள்கள்! – பெரும்பாலான நாடுகள் மேக விதைப்புக்கு சில்வர் ஐயோடைட் பயன்படுத்தினாலும் கூட ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை மையம் (NCM) சில்வர் ஐயோடைடுக்குப் பதிலாக டைட்டானியம் ஆக்ஸைடு என்ற வேதிப்பொருள் பூசப்பட்ட நுண் துகள்களையே பயன்படுத்துவது தொடர்பாக சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பயன்பாட்டுக்கான பலனை ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துபாய் பெருமழை வெள்ளத்துக்கு மேக விதைப்பு குளறுபடிகள் தான் காரணம் என்று திட்டவட்டமாக சொல்லப்படாவிட்டாலும் கூட மேக விதைப்பின் நீண்ட கால பாதிப்புகள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கவே செய்கின்றனர். நம் சந்ததிகளுக்கு நாம் சேர்த்து வைக்கக்கூடிய மிகப் பெரிய சொத்து இயற்கையை அப்படியே விட்டுச் செல்வதாக மட்டுமே இருக்க முடியும். வளர்ச்சி, வளர்ச்சி என்று மனிதர்களின் சொகுசுக்காக வளங்களைச் சுரண்டினால், இயற்கையை சீண்டினால் அழிவை நாம் வரவேற்றுக் கொண்டிருக்கிறோம் என்றே அர்த்தம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.