பெங்களூரு: “உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்து, அதை சட்டவிரோதமானது என்று விவரித்தது. ஆனால் மோடி அதை நியாயப்படுத்த முயன்றார். அப்போது அவரின் கைகள் நடுங்கின” என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் மண்டியாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் பேசியது: “பாஜக கட்சி பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. ஆனால், தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தது. விவசாயிகளின் குறைகளை சரிசெய்ய மத்திய அரசு தவறிவிட்டது. விவசாயிகளின் நெருக்கடியை இந்த அரசாங்கம் சரிசெய்ய தவறியதால் அவர்கள் வருத்தப்படுகிறார்கள்.
உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்களை ரத்து செய்து, அதை சட்டவிரோதமானது என்று விவரித்தது. ஆனால் மோடி அதை நியாயப்படுத்த முயன்றார். ஆனால். ஒரு பேட்டியில் தேர்தல் பத்திரங்கள் பற்றி பேசியபோது மோடியின் கைகள் நடுங்கின.
சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையால் விசாரிக்கப்பட்டவர்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கியதால், அவர்களின் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பத்திரங்கள் உலகின் மிகப் பெரிய ஊழல். இரண்டு சித்தாந்தங்களின் மோதல்தான் வரவிருக்கும் மக்களவைத் தேர்தல். இது சுமார் 25 பெருமுதலாளிகளின் நலனுக்காக நடத்தப்படும் அரசாங்கம்” என்றார் ராகுல் காந்தி.
முன்னதாக, “15-20 நாட்களுக்கு முன்பு பாஜக 180 இடங்களை வெல்லும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது 150 இடங்களே கிடைக்கும் என்று நினைக்கிறேன்” என்று உத்தரப் பிரதேசத்தில் குறிப்பிட்டார். அதன் முழு விவரம்: “மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 150 இடங்களே கிடைக்கும்” – ராகுல் காந்தி கணிப்பு