சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழக எல்லையில் இருந்து4 கி.மீ. தொலைவில், காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணையைக் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அணையால் காவிரிக்கு தண்ணீர் வருவது தடைபட்டு, டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறும்.
கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பான வரைவு அறிக்கையை அளித்தபோது, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் கருத்துகளைக் கேட்டாமல், மத்திய நீர்வள அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு மாபெரும் துரோகம் இழைத்திருக்கிறது.
கர்நாடகாவில் காவிரி ஆறு 320 கி.மீ. தூரம் பாய்கிறது. ஆனால்,தமிழகத்தில் 416 கி.மீ. தூரம் பாய்கிறது. எனவே, தமிழகத்துக்குத்தான் உரிமை அதிகம்.
இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு சுமூகத் தீர்வு காணாவிட்டால், அடுத்த 15 நாட்களில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
பஞ்சு மற்றும் நூல்விலையை எதிர்த்து கடந்த 10 நாட்களாக கோவையில் தொழிற்சாலைகள் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால், மத்திய அரசுநூல் விற்பனை நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது. இது தென்னிந்தியாவின் பொருளாதாரத்தையே நசுக்குகிறது.
இந்தியாவில் வாழும் 140 கோடி பேரில் 24,832 பேர் மட்டுமே சம்ஸ்கிருதம் பேசுகின்றனர். இந்த மொழியின் வளர்ச்சிக்காக கடந்த 3 ஆண்டுகளில் ரூ.644 கோடிநிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு வெறும்ரூ.29 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சிந்தனை அமர்வு மன்றத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 300 பிரதிநிதிகள் பங்கேற்று, பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
தேசிய அளவிலான பிரச்சினைகள், காங்கிரஸ் இயக்கத்தைஅமைப்பு ரீதியாக வலுப்படுத்துவது, கொள்கைரீதியான சித்தாந்தங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக, அந்தக் கூட்டத்தை காங்கிரஸ் நடத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினர்.