அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட தனது மனைவி ரிவாபாவுக்கு வாய்ப்பு அளித்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜோ நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு: “குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெற்றதற்காக ரிவாபாவுக்கு வாழ்த்துகள். கடின உழைப்பின் மூலம் நீங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் நினைத்து பெருமைப்படுகிறேன். சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்ற எனது வாழ்த்துகள்.
ரிவாபாவின் திறனை அறிந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரிவாபா ஜடேஜாவின் பின்னணி: ரஜ்புத் சமூகத்தின் ராஜ பரம்பரையைச் சேர்ந்தவரான ரிவாபா ஜடேஜா, மெகானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளார். அரசியலில் தீவிர ஆர்வம் கொண்டவரான ரிவாபா, ஜாம்நகர் – சவுராஷ்ட்ரா பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹரி சிங் சோலங்கி, இவரது உறவினர். ஜாம் நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட ரிவாபாவுக்கு பாஜக வாய்ப்பு வழங்கி இருக்கிறது.