அவள் விகடன் நடத்தும் ‘சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி, தமிழகம் முழுக்க 11 இடங்களில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி நேற்று மதுரையில் நடந்து முடிந்த நிலையில் இரண்டாவது போட்டி திருச்சியில் இன்று (29/10/2023) நடந்து வருகிறது. ஏராளமான பெண்களுடன் ஆண்களும், குழந்தைகளும் உற்சாகமாகக் கலந்துகொண்டு வருகிறார்கள்.
இரண்டு சுற்றுகளாக நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் சுற்றில் போட்டியாளர்கள் வீட்டிலிருந்து சமைத்துக்கொண்டு வந்த உணவைக் காட்சிப்படுத்த வேண்டும். மெனு வடிவமைக்கப்படும் விதம், செய்முறை, காட்சிப்படுத்தும் விதம், சுவை மற்றும் பதம் ஆகியவற்றின் அடிப்படையில் பத்து பேர் அடுத்த சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இரண்டாம் சுற்றில் நடுவர் கூறும் விதிமுறைகளைப் பின்பற்றி போட்டி நடைபெறும் இடத்தில் நேரடியாகச் சமைக்க வேண்டும். இந்தச் சுற்றில் வெற்றி பெறுபவர்கள் சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்று பிற இடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களுடன் களம் காண்பார்கள்.
சமையல் சூப்பர் ஸ்டாரை தேர்ந்தெடுக்கும் இந்நிகழ்ச்சியின் நடுவராக தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா பங்கேற்கிறார். இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பொருள்கள் காத்திருக்கின்றன.
திருச்சியில் இன்று நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் இருந்தும் போட்டியாளர்கள் வெகு உற்சாகத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர்.
ஆரோக்கிய சமையல், பாரம்பர்ய சமையல், குடும்பத்தில் வழி வழியாகத் தொடர்ந்து வரும் பரம்பரை சமையல், வட்டார சிறப்பு சமையல் ஆகிய நான்கு அம்சங்களை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
சிறுதானியங்களில் காரம், இனிப்பு, மெயின் கோர்ஸ், ஸ்நாக்ஸ் என ஆரோக்கிய உணவுகளும், ’சண்டே போட்டி வைத்தால் அசைவ உணவுதான் சமைப்போம்’ என வித விதமான பிரியாணிகள், அரைத்து வைத்த குழம்பு வகைகள் எனவும், ’தலைமுறை தலைமுறையாக நாங்கள் இந்த உணவை எங்கள் வீட்டு மெனு கார்டில் இருந்து எடுக்க மாட்டோம்’ ரக உணவுகளையும், இன்னும் பாரம்பர்ய உணவுகள், ஊர் சார்ந்த உணவுகள், புதியதாக செய்ய வேண்டும் என்ற புது முயற்சி உணவுகள் என உணவுகளின் பட்டியல் நீண்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
திருச்சியில் நடைபெறும் இந்த சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் 80 வயது வரை பலரும் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டுள்ளனர். நடுவர் செஃப் தீனா ஒவ்வொரு போட்டியாளரின் உணவையும் ருசிபார்த்து மதிப்பெண் அளித்து வருகிறார்.
காலை 10 மணிக்கு ஆரம்பித்த போட்டி தற்போது வரை நடைபெற்று வருகிறது. முதல் கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் 10 போட்டியாளர்கள் அரங்கில் சமைக்க வேண்டும், அந்த 10 போட்டியாளர்களில் இருந்து மூன்று பேர் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.