மாணாக்கர்கள் சீருடையுடன்தான் பள்ளிக்குள் செல்ல வேண்டும்! நடிகை குஷ்பு

சென்னை: மாணாக்கர்கள் சீருடையுடன்தான் பள்ளிக்குள் செல்ல வேண்டும் சாதி, மதத்தை அல்ல என்று சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக உறுப்பினர்களுக்கு வாக்கு சேகரித்த நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான நடிகை குஷ்பு தெரிவித்தார்.

கர்நாடகாவில் எழுந்துள்ள ஹிஜாப் சர்ச்சை நாடு முழுவதும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தை தேசிய பிரச்சினையாக்காதீர்கள் என்றும் உச்சநீதி மன்றமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தையொட்டி, சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கிய குஷ்பு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, என்னைப் பொறுத்தவரை ஒரே விஷயம், மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு செல்லும்போது அங்கு சீருடையென்று ஒன்று உள்ளது. அதை அணிந்துதான் செல்ல வேண்டும்.

ஹிஜாப் அணிவதும், அணியாமல் இருப்பதும் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்.  நீங்கள் ஹிஜாப் அணிந்து செல்லலாம்; பள்ளி, கல்லுரிகளின் கேட் வரைக்கும் ஹிஜாப் அணிந்து செல்லுங்கள், அதன்பிறகு பள்ளிக்கூடத்துக்குள் செல்லும்போது, நாம் எந்த சாதியையும், எந்த மதத்தையும் உள்ளே கொண்டு செல்லாமல் இந்த நாட்டில் இருக்கிற குழந்தைகள் போல, பள்ளிக்கூடத்தின் விதிமுறைகளின்படி சீருடை அணிந்துதான் பள்ளிக்குள் செல்ல வேண்டும்.

நானும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவள். நான் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கூடத்துக்குச் சென்றதே கிடையாது. மற்ற நண்பர்களும் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்தது கிடையாது. பள்ளிக்கூடத்தினுள் செல்லும்போது சீருடையில் தான் செல்வோம்.

பெங்களூரில் சொன்னது என்ன?  பள்ளிக்கூடத்துக்குள் வரும்போது ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என்றுதான் சொல்கிறோம், பள்ளிக்கூடத்துக்கே வரவேண்டாம் என்று சொன்னோமா? காவித்துண்டு போட்டுக்கொண்டு யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஹிஜாப் அணிந்துதான் நாங்கள் பள்ளிக்கு வருவோம் என்று அடம்பிடிக்கும்போதுதான், சில குழந்தைகள் காவித்துண்டு அணிந்து கொண்டு உள்ளே சென்றுள்ளனர். இரண்டுமே தவறுதான்.

ஒவ்வொரு பள்ளிக்கும் ஏன் சீருடை கொடுக்கப்படுகிறது. சீருடை வித்தியாசம் ஏன் இருக்கிறது. அனைத்து பள்ளிகளுக்கும் ஏன் வேறு வேறு சீருடைகள் உள்ளன? அந்தந்த பள்ளியைத் தனியாக அடையாளம் காட்டத்தான்  சீருடை உள்ளது. அந்தப்பள்ளி எப்படிப்பட்ட பள்ளியென்று தெரிந்திருந்தும், குழந்தைகளை ஏன் அங்கு சேர்த்தீர்கள். பின்னர், திடீரென்று ஏன் இந்த பிடிவாதம்.

எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் இதை வைத்து ஏன் பிரச்சினை செய்துகொண்டுள்ளனர். குழந்தைகள் மனதில் ஏன் சாதி, மதத்தைக் கொண்டு வருகிறீர்கள், இதைத் தான் நாங்கள் எதிர்க்கட்சிகளிடம் கேட்கிறோம். பள்ளிக்கூடத்துக்கு ஹிஜாப் அணிந்து செல்வது தவறு என்றால், காவித்துண்டு, நீலத்துண்டு அணிந்து செல்வதும் தவறுதான்.

இவ்வாறு அவர்கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.