பூஸ்டர் தடுப்பூசி செயல்திறன் 4 மாதத்தில் குறைகிறது- அமெரிக்க ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவியதால் தடுப்பூசியின் 3-வது டோசை (பூஸ்டர் தடுப்பூசி) பல்வேறு நாடுகள் தங்களது குடிமக்களுக்கு செலுத்தி வருகின்றன. அமெரிக்காவில் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் தடுப்பூசியின் 3-வது டோஸ் செலுத்தப்படுகிறது. பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செயல்திறன் 4 மாதத்தில் கணிசமாக குறைகிறது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 26-ந்தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 22-ந்தேதி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 2.40 லட்சம் மற்றும் 93 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதன் அடிப்படையில் புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நடத்திய புதிய ஆய்வில் கூறியிருப்பதாவது:-

பைசர் மற்றும் மாடர்னா நிறுவன தடுப்பூசிகளின் 3-வது டோசின் செயல்திறன் 4-வது மாதத்தில் கணிசமாக குறைந்து விடுகிறது. உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பரவிய காலத்தில் அவசர சிகிச்சைகளுக்கு எதிரான தடுப்பூசியின் செயல்திறன் 3-வது டோசுக்கு பிறகு இரண்டு மாதங்களில் 87 சதவீதமாக இருந்தது. ஆனால் 4-வது மாதத்தில் செயல் திறன் 66 சதவீதமாக குறைந்தது.

ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவதற்கு எதிரான தடுப்பூசியின் செயல் திறன் முதல் 2 மாதங்களில் 91 சதவீதமாக இருந்தது. ஆனால் 3-வது டோசுக்கு பிறகு 4-வது மாதத்தில் 78 சதவீதமாக குறைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.