Tamil News Today LIVE: திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை திரும்பப் பெற முடியாது – ஐகோர்ட் திட்டவட்டம்

Tamil Nadu News Today LIVE: Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 103-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101.40காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் வினாத்தாள்கள் லீக்!

12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் மீண்டும் கசிந்தது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடைபெறக்கூடிய உயிரியல், வணிக கணிதம் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்ததாக புகார் எழுந்துள்ளது.

எல்.ஐ.சி பங்கு விற்பனையில் மத்திய அரசு மும்முரம் காட்டக்கூடாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். எல்.ஐ.சி பங்கு விற்பனை நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன் மூலம் ரூ.63 ஆயிரம் கோடி திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

India News Update: டிக் டாக், யூசி பிரவுசர் போன்ற செயலிகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே தடை விதித்திருந்தது. இந்நிலையில், தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறி மேலும் 54 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.

கிரிப்டோகரன்சி என்பது மக்களை ஏமாற்றும் மோசடி திட்டங்கள் போன்றவை என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ரபி சங்கர் தெரிவித்தார்.

கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி

கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு 12 – 18 வயது சிறுவர் சிறுமியர்களுக்கு செலுத்தலாம் என மத்திய மருத்துவ தரக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகளவில் இதுவரை 41.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 33.55 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 58.43 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

 “

Live Updates

4:55 (IST) 15 Feb 2022
திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை திரும்பப் பெற முடியாது – ஐகோர்ட் திட்டவட்டம்

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து கட்டுப்பாடு குறித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை திரும்பப் பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது


4:23 (IST) 15 Feb 2022
உக்ரைனில் உள்ள இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

உக்ரைனில் ஏற்படும் போர் பதற்றம் காரணமாக அங்குள்ள இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்றும், இந்திய விமானப்படை விமானங்களை அனுப்பி மீட்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்


4:21 (IST) 15 Feb 2022
கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது – என்.கே.அரோரா

கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்றும், கோர்பேவாக்ஸ் மற்ற தடுப்பூசிகளைப் போலவே 2 டோஸ்கள் கொண்டது என்றும் கொரோனா பணிக்குழு தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்


4:03 (IST) 15 Feb 2022
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை கோரி மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக புகார்

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் மாநில தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்


4:01 (IST) 15 Feb 2022
தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை அமர்வுக்கு மாற்றம்

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்படும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது


4:00 (IST) 15 Feb 2022
ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் மற்றும் ஒரு கிலோ நெய் – சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் மற்றும் ஒரு கிலோ நெய் வழங்கப்படும் என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்


3:40 (IST) 15 Feb 2022
போதைப்பொருள் தடுப்பு வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை பாராட்டு

போதைப்பொருள் தடுப்பு வழக்கில் கடத்தலை தடுக்க முயன்ற காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.

மேலும், காவல்துறை தரப்பில் 180 நாட்களுக்கு முன்பாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்ற தமிழக அரசு வாதத்தை ஏற்று, போதைப்பொருள் விற்பனை, கடத்தல் தொடர்பான வழக்குகளில் காவல்துறை கண்காணிப்பாளரே விசாரணைகளை கண்காணிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்


3:23 (IST) 15 Feb 2022
பிப்ரவரி 19ம் தேதி கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு விடுமுறை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வரும் 19ம் தேதி கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு விடுமுறை என காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது


3:13 (IST) 15 Feb 2022
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்; டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் முற்றுகை

தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் நியாயமான முறையில் விசாரணையை நடத்த வேண்டும் என டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை மாணவர்கள் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


2:51 (IST) 15 Feb 2022
ஜெயலலிதா மரணம்.. அப்பல்லோ மற்றும் சசிகலா வழக்கறிஞர்களுடன் ஆலோசனை!

ஜெயலலிதா மரணம் குறித்து, மருத்துவ குழு முன்னிலையில் விடுபட்ட விசாரணை விரைவில் துவங்கவுள்ள நிலையில், அப்பல்லோ மற்றும் சசிகலா வழக்கறிஞர்களுடன்’ ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.


2:51 (IST) 15 Feb 2022
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா!

மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார்.


2:50 (IST) 15 Feb 2022
முல்லைப் பெரியாறு.. உரிமைகளை நிலை நாட்டிட ஓபிஎஸ் வலியுறுத்தல்!

முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டிட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் அனுமதியின்றி’ கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஓபிஎஸ் லியுறுத்தி உள்ளார்.


2:50 (IST) 15 Feb 2022
உக்ரைன் எல்லையில் இருந்து பின்வாங்கும் ரஷ்ய ராணுவப்படைகள்!

உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த சில ரஷ்ய ராணுவப்படைகள் மீண்டும் தங்கள் தளங்களுக்கு திரும்பி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


2:11 (IST) 15 Feb 2022
கனடாவில் அவசர நிலை பிரகடனம்- பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவு!

கனடாவில்’ டிரக் டிரைவர்களின் போராட்டம் பொருளாதாரம் பாதிக்கும் அளவுக்கு தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக நாடு முழுவதும் அவசர நிலை பிறப்பித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார். கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பிறகு, அவசரநிலை சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


2:04 (IST) 15 Feb 2022
திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது!

12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த நிலையில்’ மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


1:33 (IST) 15 Feb 2022
12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு.. மேலும் ஒரு வினாத்தாள் லீக்!

தமிழகத்தில், 12ஆம் வகுப்பு உயிரியல், வணிக கணிதம் வினாத்தாள் ஏற்கெனவே கசிந்த நிலையில், நாளை நடைபெற இருக்கும் இயற்பியல் தேர்வு வினாத்தாள் இன்று கசிந்தது.


1:31 (IST) 15 Feb 2022
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை!

வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்படுவதாக கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


1:30 (IST) 15 Feb 2022
வினாத்தாள்கள் கசிவு.. மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பிலிருந்து விடுவிப்பு!

10,12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்தது தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வம் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


1:16 (IST) 15 Feb 2022
சட்டவிரோதமாக வீட்டில் வெடி தயாரித்தபோது விபத்து.. ஒருவர் உயிரிழப்பு!

மதுரை, உசிலம்பட்டி அருகே சட்டவிரோதமாக வீட்டில் வெடி தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 9 மாத குழந்தை, தாய் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


1:15 (IST) 15 Feb 2022
காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர்!

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் அஷ்வனி குமார், காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


1:15 (IST) 15 Feb 2022
வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமரா.. நீதிமன்றம் தள்ளுபடி!

வாக்குச்சாவடி, வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கோரி, தொடரப்பட்ட வழக்கில்’ ரூ. 5,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளை ஆராயமால்’ நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்துடன் தொடரப்பட்டதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.


12:54 (IST) 15 Feb 2022
10.5 சதவீத உள்ஒதுக்கீடு : மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாம்

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு அறிவித்தது செல்லுபடியாகாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராஅன மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மேல்முறையீடு மனுக்களை மாற்றி விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.


12:29 (IST) 15 Feb 2022
உக்ரைனிலிருந்து இந்தியர்கள் வெளியேற வலியுறுத்தல்

உக்ரைன் – ரஷ்யா இடையே நிலவும் போர்ப்பதட்ட சூழல் காரணமாக அந்நாட்டில் பயிலும் இந்திய மாணவர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.


12:23 (IST) 15 Feb 2022
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி

மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 5வது வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பு. ராஞ்சியில் உள்ள தொரண்டா கருவூலத்தில் முறைகேடாக ரூ.139 கோடி மோசடி செய்ததாக 2005ல் லாலு பிரசாத் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று உறுதி செய்துள்ளது.


12:21 (IST) 15 Feb 2022
பேட்டரி அமரர் ஊர்தி அறிமுகம்

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை வார்டுகளில் இருந்து பிணவரைக்கு கொண்டு செல்வதற்கு பேட்டரி அமரர் ஊர்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


12:10 (IST) 15 Feb 2022
பப்ஜி மதனின் மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி- சென்னை உயர்நீதிமன்றம்

குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மதன் தாக்கல் செய்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி மதனின் மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.


12:09 (IST) 15 Feb 2022
தமிழக சட்டப்பேரவையை முடிந்தால் முடக்கி பாருங்கள் – ஈபிஎஸ்க்கு உதயநிதி பதில்

தமிழக சட்டப்பேரவையை முடிந்தால் முடக்கிப் பாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையை முடக்கினால் அடுத்த முறை திமுக அதிக இடங்களில் வெல்லும் என்றும் மதுரையில் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்துள்ளார்.


12:06 (IST) 15 Feb 2022
9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


11:45 (IST) 15 Feb 2022
பருவமழை இழப்பீடு தொகைகளை தமிழக அரசு வழங்கவில்லை

அதிமுக ஆட்சியில் விவசாயத்திற்கு தனி கவனம் செலுத்தப்பட்டது. உடனுக்கு உடன் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் பருவமழை இழப்பீடு தொகைகளை தமிழக அரசு வழங்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலுக்காக கும்பகோணத்தில் பிரச்சாரம் செய்தார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி.


11:39 (IST) 15 Feb 2022
36ம் கட்ட விசாரணைக்காக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆஜர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 36ம் கட்ட விசாரணைக்காக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆஜரானார்.


11:14 (IST) 15 Feb 2022
கே.டி ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜர்

விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


10:59 (IST) 15 Feb 2022
”கோவிட் கேர் மையங்கள் படிப்படியாக குறைக்கப்படும்”

தேவை இல்லாத பட்சத்தில் கோவிட் கேர் மையங்கள் படிப்படியாக குறைக்கப்படும். கோவிட் கேர் மையங்களில் பணிபுரிபவர்கள் பழைய பணிக்கு திரும்புவார்கள் என்று

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


10:52 (IST) 15 Feb 2022
2 பள்ளிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் : மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர்

திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் 2 பள்ளிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.


10:43 (IST) 15 Feb 2022
திண்டுக்கல்: டாக்டர் வீட்டில் 280 பவுன் நகை கொள்ளை

திண்டுக்கல்லில் டாக்டர் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 280 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


10:29 (IST) 15 Feb 2022
உரிமம் இல்லாத துப்பாக்கி: ஒசூரில் ஒருவர் கைது

ஒசூர் சின்னமலசோனை பகுதியில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததாக சீனிவாசன்(40) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.


10:14 (IST) 15 Feb 2022
தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து ரூ.37,904க்கு விற்பனை செய்யப்படுகிறது.


10:09 (IST) 15 Feb 2022
இளைஞரை மீட்க ரூ.75 லட்சம் செலவு

கேரளாவில் பாறை இடுக்கில் சிக்கிய இளைஞரை மீட்பதற்கு ரூ.75 லட்சம் செலவானது தெரியவந்துள்ளது.


9:49 (IST) 15 Feb 2022
மதுவிலக்கு பற்றி என்னுடன் விவாதிக்க தயாரா? -அன்புமணி சவால்

மதுவிலக்கு பற்றி என்னுடன் விவாதிக்க திமுக தயாரா? அதிமுக தயாரா? என்று பாமகவின் அன்புமணி சவால் விடுத்துள்ளார்.


9:41 (IST) 15 Feb 2022
அண்ணாமலை தேவையின்றி பேசுகிறார்: முன்னாள் அமைச்சர் தாக்கு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேவையின்றி பேசுகிறார். தமிழ்நாடு திராவிட பூமி.. பெரியார், அண்ணாவின் பூமி என்று அதிமுக முக்கியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு தெரிவித்தார்.


9:38 (IST) 15 Feb 2022
கொரோனா: குணமடைந்தோர் 82,817 பேர்

கொரோனாவில் இருந்து மேலும் 82,817 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 4,23,127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்தது.


9:21 (IST) 15 Feb 2022
முதல்வர் ஸ்டாலின் மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு

முதல்வர் ஸ்டாலின், திமுக எம்எல்ஏ உதயநிதி ஆகியோர் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற திட்டமிட்டுள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.


9:16 (IST) 15 Feb 2022
தேனி: அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி

தேனி, கும்பக்கரை அருவியில் குளிக்க ஓராண்டுக்குப் பின் இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


9:15 (IST) 15 Feb 2022
17-ஆம் தேதியுடன் பிரசாரம் நிறைவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம், வரும் 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவு பெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


9:14 (IST) 15 Feb 2022
கோவில் நிலங்கள் மூலம் ரூ.88 கோடி

கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மூலம் ரூ.88 கோடி வரை வசூலிக்கப்பட்டதாக இந்து சமய அற நிலையத் துறை தெரிவித்துள்ளது.


9:10 (IST) 15 Feb 2022
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக: பிரேமலதா

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு உள்ளாட்சி தேர்தலில் அதன் விளைவு எதிரொலிக்கும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.


9:01 (IST) 15 Feb 2022
தேர்தல் பறக்கும் படை அதிரடி: ரூ.2,97,000 ரொக்கம் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகார்கள் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்து வந்த ரூ.2,97,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


8:34 (IST) 15 Feb 2022
உக்ரைனில் நீடிக்கும் போர் பதற்றம்

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யாவின் படையெடுப்பு நாளை (பிப்.16) தொடங்கலாம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி கூறியிருப்பது போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


8:32 (IST) 15 Feb 2022
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டாளிகளின் சொத்துக்கள் முடக்கம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டாளிகளின் ரூ.110 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.