பீகாரில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு

பாட்னா, 
சாயத்துக்காக அவுரிச்செடியை கட்டாயமாக பயிரிட உத்தரவிட்ட ஆங்கில அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி, 1917-ம் ஆண்டு பீகார் மாநிலம் சம்பாரனில் சத்தியாகிரக இயக்கத்தை தொடங்கினார்.
அதை நினைவுகூரும்விதமாக இங்குள்ள ராட்டை பூங்காவில் காந்தியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை நேற்று முன்தினம் இரவு உடைத்து கீழே தள்ளப்பட்டிருந்தது.

இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்தப் பகுதியில் அன்றைய இரவு மதரீதியிலான முழக்கங்கள் கேட்டதாகவும், எனவே மதச்சார்பு குழுக்கள்தான் இதற்கு காரணமாக இருக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வலம் வந்தன.
இந்நிலையில் சம்பவ இடத்தை பார்வையிட்ட கிழக்கு சம்பாரன் மாவட்ட மாஜிஸ்திரேட்டு ஸ்ரீசாத் கபில் அசோக், ‘காந்தியின் சிலையை உடைத்தவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். அவர்களுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரப்படும். மாவட்ட நிர்வாகத்தால் காந்தி சிலை இங்கு மறுபடி நிறுவப்படும். இந்தப் பூங்காவில் கண்காணிப்பு கேமராவை அமைப்பதோடு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும்.’ என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.