'அரசின் நிலைப்பாட்டை மக்கள் கேட்கட்டும்' – ஹிஜாப் விசாரணை நேரலையை நிறுத்த மறுத்த நீதிமன்றம்

பெங்களூரு: ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற விசாரணையை கடந்த 5 நாட்களாக ஒரு லட்சத்தில் இருந்து 5 லட்சம் பேர் வரை நேரலையில் பார்த்து வரும் நிலையில் நேரலையை நிறுத்த நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதித்த தடையை எதிர்த்து உடுப்பி முஸ்லிம் மாணவிகள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கு 6-வது நாளாக இன்று தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இன்று கர்நாடக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங் நாவதகி வாதங்களை முன்வைத்தார்.

அவர், “இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியமான மத நடைமுறை ஒன்றும் அல்ல. எனவே ஹிஜாப் அணிய விதித்த தடை, அரசியல் சாசன சட்டம் 25-ஐ மீறுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது” என்று தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார். இன்றைய விசாரணையின் தொடக்கத்தில் மாணவர்கள் சார்பில் ஆஜராகி வாதாடும் மூத்த வழக்கறிஞர் ரவிவர்ம குமார், நீதிபதிகளிடம் ஒரு கோரிக்கை யை வைத்தார். அதில், “வழக்கின் நேரடி ஒளிபரப்பால் மாணவர்கள் சொல்ல முடியாத கஷ்டங்களுக்கும் துயரங்களுக்கும் தள்ளப்படுவதால், விசாரணை யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பை செய்யப்படுவதை நிறுத்த வேண்டும்” என்றார்.

அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி அவஷ்தி, “இந்த விவகாரத்தில் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளவர்களின் (அரசு) நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் கேட்கட்டும்” என்று கூறி நேரடி ஒளிபரப்பை நிறுத்த மறுத்தார். முன்னதாக, கடந்த ஐந்து நாட்களாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணை யூடியூப் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுவருகிறது. இதனால் வாதங்களை மக்கள் நேரடியாக பார்த்து வருகிறார். கடந்த 5 நாட்களாக ஒரு லட்சத்தில் இருந்து 5 லட்சம் பேர் வரை விசாரணையை நேரலையில் பார்க்கிறார்கள் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.