உ.பி.யில் திருமண விழாவில் சோகம்; இரும்பு வலை உடைந்ததால் கிணற்றில் விழுந்து பெண்கள், குழந்தைகள்: 13 பேர் உயிரிழப்பு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் திருமண விழாவின் போது கிணற்றில் மேல் போடப்பட்ட இரும்பு வலை உடைந்ததால் அதன் மீது அமர்ந்திருந்த பெண்கள், குழந்தைகள் 13 பேர் உயிரிழந்தனர்.

உத்தரபிரதேசத்தின் குஷிநகர் மாவட் டத்தில் உள்ள நெபுவா நவுராங்கியா என்ற கிராமத்தில் நேற்று ஒரு திருமண விழா நடந்தது. திருமணத்துக்கு முந்தைய ‘ஹல்டி’ எனும் சடங்கு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான உறவினர்களும் நண்பர்களும் வந்திருந்தனர். அங்கிருந்த பெரிய கிணறு ஒன்றின் மீது இரும்பு வலையுடன் கூடிய மூடி போடப்பட்டிருந்தது அதன் மீது சில பெண்களும் குழந்தைகளும் அமர்ந்திருந்தனர்.

அப்போது திடீரென பாரம் தாங்காமல் கிணற்றின் மேல் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வலை உடைந்தது. அதன் மீது அமர்ந்திருந்த பெண்கள், குழந்தைகள் 13 பேர் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தனர். இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.ராஜலிங்கம் தெரிவித்தார்.

ரூ.4 லட்சம் நிதியுதவி

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று குஷிநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. விபத்து குறித்து போலீ ஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை முடிந்தபின்னர், உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில அரசின் தலைமை செய்தித் தொடர்பாளர், ‘‘விபத்து நடந்த இடத்துக்கு அதிகாரிகளும் போலீஸாரும் விரைந்துள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகள் செய்யவும் காயமடைந்தோருக்கு முறையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவும் அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்’’ என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி இரங்கல்

விபத்து குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘‘உத்தரபிரதேசத்தில் நடந்த விபத்து இதயத்தை பிளக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன். பாதிக்கப்பட்ட வர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் எல்லா உதவிகளையும் அளித்துவருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘‘குஷிநகர் மாவட்டம் நெபுவா நவுராங் கியா கிராமத்தில் நடந்த துரதிர்ஷ்ட வசமான விபத்தில் கிணற்றில் விழுந்து சிலர் இறந்திருப்பது வேதனை அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந் தவர்கள் ராமர் அருளால் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப் பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என்று கூறியுள்ளார். திருமண விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் இரும்பு வலை உடைந்ததால் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் உத்தரபிரதேச கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.