முதல்வரின் கடிதத்தை திருப்பி அனுப்பிய ஆளுநர்: உச்சகட்ட மோதல்!

மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர்
மம்தா பானர்ஜி
தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு ஆளுநராக
ஜக்தீப் தன்கர்
பொறுப்பேற்றது முதல், அவருக்கும், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.

இதனிடையே, அரசியலமைப்பு சட்டத்தின், 174ஆவது பிரிவு வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையை, பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் முடக்கி வைத்து அம்மாநில ஜக்தீப் தன்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எதிர்வரவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து மம்தா பானர்ஜி அரசு பரிசீலித்து வந்த நிலையில், மேற்குவங்க சட்டமன்றம் கூடுவதை நிறுத்தி வைத்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இந்த உத்தரவு அரசின் செயல்பாடுகளை பாதிக்கும். அரசியலமைப்பு ரீதியிலான நெருக்கடிக்கும் வழி வகுக்கும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில், சட்டப்பேரவையை கூட்டுவதற்கான மேற்கு வங்க முதல்வரின் பரிந்துரை கடிதத்தை ஆளுநர் ஜக்தீப் தன்கர் திருப்பி அனுப்பியுள்ளார், மேற்குவங்க சட்டப்பேரவை முடக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீண்டும் கூட்ட வேண்டும் என்று பரிந்துரைத்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கு கடிதம் எழுதிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, முதல்வரின் பரிந்துரைக் கடிதத்தை ஆளுநர் ஜக்தீப் தன்கர் திருப்பி அனுப்பியுள்ளார். அரசியலமைப்பின் படி மாநில அமைச்சரவை பரிந்துரைத்தால் மட்டுமே பேரவையை கூட்ட முடியும் எனவும், முதல்வரின் பரிந்துரையை மட்டும் ஏற்க முடியாது என ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.