உக்ரைன் பறக்கும் மத்திய அமைச்சர்கள் – இந்தியர்களை மீட்க பக்கா ப்ளான்!

உக்ரைன் நாட்டில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க, அந்நாட்டிற்கு மத்திய அமைச்சர்களை அனுப்பி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது, கடந்த ஐந்து நாட்களாக, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில், ரஷ்யப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

உக்ரைன் நாட்டில் நாளுக்கு நாள் நிலைமை மோசம் அடைந்து வருவதால், அங்குள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு, “ஆப்பரேஷன் கங்கா” என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் சுமார் 1,000 பேர் உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை, உக்ரைன் விவகாரம் தொடர்பாக, டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி, மூத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் மட்டக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்டு வரும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பணியை, மத்திய அமைச்சர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி, மத்திய அமைச்சர்கள் ஜோதிராதித்யா சிந்தியா, கிரண் ரிஜிஜூ, வி.கே.சிங், ஹர்தீப் சிங் புரி ஆகியோர் உக்ரைன் நாட்டிற்கு சென்று, இந்தியர்களை மீட்கும் பணியை மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. உக்ரைனில் சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.