பொதுமக்களை சுட்டுக் கொல்கிறதா ரஷ்யா ராணுவம்?.. பதற வைக்கும் புதுத் தகவல்!

இந்திய மாணவர்
நவீன் எப்படி கொல்லப்பட்டார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் குண்டு வீச்சில் உயிரிழந்ததாக மத்திய அரசு தகவல் தெரிவிக்கிறது. ஆனால் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது.

2வது தகவல் உண்மையாக இருக்கும் என்றால், அப்பாவி பொதுமக்களை ரஷ்யப் படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உக்ரைனின் 2வது பெரிய நகரமான கர்கீவ் நகரில் ரஷ்யப் படையினர் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். ஏவுகணை மூலம் தான் தாக்குதல் நடந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்திய மாணவர் நவீன் கொல்லப்பட்ட விவகாரத்தின் மூலம் ரஷ்யப் படையினர் ஊருக்குள் புகுந்து பொதுமக்களைத் தாக்கி வருவதாக அஞ்சப்படுகிறது.

இந்திய மாணவர் நவீன் உள்ளிட்ட பல்வேறு மாணவர்கள் கர்கீவ் நகரிலிருந்து கிளம்பி உக்ரைனை விட்டு வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது ரஷ்யப் படையினரின் குண்டு வீச்சில் உயிரிழந்ததாக முதலில் தகவல்கள் வெளியாகின. மத்திய அரசும் அதுபோலத்தான் கூறியிருந்தது.

ஆனால் நவீன் ரஷ்யப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக இந்தியன் எக்ஸ்பிர் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அது வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைன் நாட்டு நேரப்படி காலை 10.30 மணியளவில் நவீன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் ஒரு மளிகைக் கடை முன்பு வரிசையில் காத்திருந்தபோது, ரஷ்யப் படையினர் பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர். அதில்தான் அவர் இறந்ததாக நவீனுடன் ஹாஸ்டல் அறையில் தங்கியிருக்கும் ஸ்ரீதரன் கோபாலகிருஷ்ணன் என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்திய மாணவர் பலி.. இதயமே சுக்கு நூறா உடைஞ்சு போச்சு.. குஷ்பு வேதனை

இதை வைத்துப் பார்த்தால் கர்கீவ் நகரில் ரஷ்யப் படையினர் பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றனரா என்ற அச்சம் எழுந்துள்ளது. அப்படி நடந்தால் அது மிக மோசமானதாக இருக்கும். நிராயுதபாணியாக இருக்கும் அப்பாவி பொதுமக்களை ஏன் ரஷ்ய ராணுவம் சுட்டுக் கொல்கிறது என்று தெரியவில்லை.

அப்பாவி பொதுமக்களை நாங்கள் குறி வைக்கவில்லை. ராணுவ நிலைகளைத்தான் தாக்குவதாக கூறி வருகிறது ரஷ்யா. ஆனால் நவீன் சம்பவம் அதற்கு நேர் மாறாக இருக்கிறது. ஏற்கனவே ரஷ்ய ஏவுகணை ஒன்று பொதுமக்கள் இருந்த பகுதியில் வந்து விழுந்த வீடியோ வெளியாகியிருந்தது. இப்போது நவீன் சம்பவம் வந்துள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது ரஷ்ய ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் உக்ரைன் மக்களின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவே நம்ப வேண்டியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.