கிழக்கு ஜெர்மனி – மேற்கு ஜெர்மனி எனப் பிரித்த பெர்லின் சுவர் 1989-ல் அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, ‘போர் நடக்கும் எந்த பகுதிக்கும் ஆயுதங்களை அனுப்புவது இல்லை’ என ஜெர்மனி முடிவு செய்திருந்தது.
இந்த நிலையில், உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் மத்தியில் கடந்த 7 நாள்களாகப் போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா வான்வெளி, தரைவழி என தன் தாக்குதலைத் தீவிரப்படுத்திவருகிறது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
எனவே, உக்ரைன் தன்னை தற்காத்துக்கொள்ள ஜெர்மனி ஆயுதங்கள் வழங்கி உதவ ஒப்புக்கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து உக்ரைனுக்கு 2,700 சோவியத் கால `ஸ்ட்ரெலா’ ஏவுகணைகளை அனுப்ப பெர்லின் அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது. இந்த நிலையில், மேலும் 500 அமெரிக்கத் தயாரிப்பான ஸ்டிங்கர் ஏவுகணைகள் மற்றும் 1,000 டேங்க் எதிர்ப்பு ஆயுதங்களை வழங்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஜெர்மனியின் ஆயுதங்கள் உக்ரைன் செல்ல தயார் நிலையில் இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த நடவடிக்கைக்கு மத்திய பாதுகாப்பு கவுன்சில் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
இது தொடர்பாக ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின், “விளாடிமிர் புதினின் படையெடுப்புக்கு எதிராக உக்ரைனின் பாதுகாப்பை முடிந்தவரை உறுதிப்படுத்துவது எங்கள் கடமை” எனத் தெரிவித்துள்ளார்.