உலக தரத்தில் பொருட்கள் உற்பத்தி: பிரதமர் வலியுறுத்தல்| Dinamalar

புதுடில்லி: உள்ளூர் உற்பத்தியாளர்கள், உலகளவிலான தரத்தை பேண வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பட்ஜெட்டிற்கு பிறகு, ‘உலகத்திற்காக மேக் இன் இந்தியா’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் கவனம் செலுத்துவதுடன், தரமான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். செமி கண்டக்டர்கள் உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற வேண்டும். ‘மேக் இன் இந்தியா’ காலத்தின் கட்டாயம்.இந்த திட்டம் தற்போதைய காலத்தின் தேவை மட்டுமல்ல. நமது உற்பத்தி சக்தியை உலகத்திற்கு காட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்தியாவை நமக்காக மட்டுமின்றி, சுய சார்பு அடிப்படையில் உலகத்திற்கான சந்தையாக மாற்றுவது தான் நமது நோக்கம். இது, மனித வளம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு ஊக்கமளிப்பதுடன், வரும் காலங்களில் நம்மை வலிமையானதாக மாற்றும். எண்ணிலடங்கா வாய்ப்புகளை மேக் இன் இந்தியா ஏற்படுத்தி கொடுக்கும். மனித வளம் மற்றும் இயற்கை வளங்கள் மூலம் ஆசிர்வதிக்கப்பட்ட நமது நாடு, இலக்குகளை எளிதில் அடைய உதவும்.

உற்பத்தி சக்தியாக இந்தியாவை உலக நாடுகள் பார்க்க துவங்கி உள்ளன. நமது ஜிடிபி.,யில் உற்பத்தி துறை 15 சதவீதம் உள்ளது. அதே நேரத்தில், மேக் இன் இந்தியா ஏராளமான வாய்ப்புகளை ஏற்படுத்தும். கோவிட் பெருந்தொற்று காலத்தில், உலகம் முழுவதும் உள்ள விநியோக சங்கிலி உடைந்ததுடன், உலக பொருளாதாரத்தை பாதித்தது. இதனால், மேக் இன் இந்தியா முக்கியத்துவம் பெறுகிறது.

உலக தரத்திலான பொருட்களை தயாரிப்பதுடன், அது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். ஏற்றுமதி மற்றும் நமது தேவையை மனதில் வைத்து நாம் செயல்பட வேண்டும். நமது நாட்டின் தொழில்நுட்ப புரட்சி நிகழ்ந்து வருகிறது.
மின்னணு வாகனங்கள் துறையில், இந்திய உற்பத்தியாளர்கள் முன்னணி பங்கு வகிக்கலாம். சில வகை ஸ்டீல்களுக்கு நாம் இறக்குமதியை சார்ந்துள்ளோம். இரும்பு தாதுகளை ஏற்றுமதி செய்யும் நாம் அதை ஏன் இங்கு உற்பத்தி செய்யக்கூடாது. மருத்துவ சாதனங்களையும் நாம் இறக்குமதி செய்கிறோம். அதனை நமது நாட்டிலேயே தயாரிக்க முடியும் என நம்புகிறேன்.
தீபாவளி அன்று உள்ளூரில் தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகளை வாங்குவது மட்டும் உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்பது மட்டும் ஆகாது. நாம் மிகப்பெரிய அளவில் சிந்திக்க வேண்டும். உள்ளூர் உற்பத்தியாளர்கள், உலக அளவிலான தரத்தை பேண வேண்டும். பல சிக்கல்களை நீக்கிய பிறகு, இந்தியாவின் உற்பத்தி துறை சீராக உள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.