புலம் பெயர்ந்தவர்கள் நலனுக்காக 'அம்பர்லா' திட்டத்தின் கீழ் ரூ.1452 கோடி நிதி: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: பிற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு புலம் பெயர்ந்தவர்கள் நலனுக்காக அம்பர்லா திட்டத்தின் கீழ் ரூ.1,452 கோடி ஒதுக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2026 ஆம் நிதியாண்டு வரைக்குமான இந்த நிதி, இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் நலனுக்காகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு, காஷ்மீரிலிருந்து புலம்பெயர்ந்த குடும்பங்களின் மேம்பாட்டுக்காகவும், 1984- ல்  சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காகவும் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாத தாக்குதல், இடதுசாரி நக்சல்களின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், கண்ணிவெடி, எல்லைப்பகுதி குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காகவும், திரிபுரா மாநிலத்தில் உள்ள மறுவாழ்வு மையங்களின் கட்டமைப்பு மேம்பாட்டுக்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திபெத்தியர்களின் மறுவாழ்வுக்கான ஒன்றிய திபெத் நிவாரண அமைப்புக்கும், வங்காளதேசத்திலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக மேற்கு வங்க மாநிலம் பெகர் மாவட்டத்தில் உள்ள பழைய குடியிருப்புகளை  மேம்படுத்தவும் இந்த நிதி ஒதுக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.