கொழும்பு: இலங்கையில் மின் வெட்டு வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் அன்னிய செலாவணி பற்றக்குறையால் பொருளாதாரம் பெரும் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இங்கு மின்சாரம் தயாரிப்பதற்கான நிலக்கரி மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் இறக்குமதியில் சுணக்கம் ஏற்பட்டது. இதனால் ஒரு சில மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதே நிலை நீடித்தால் இலங்கையில் நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் மின்வெட்டு செய்ய வேண்டிய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்தனர். மேலும் வரும் காலத்தில் பெய்ய வேண்டிய பருவ மழை பொய்த்தால் இந்த அபாயம் மேலும் அதிகரிக்கும். இதனால் “தேவையில்லாமல் மக்கள் விளக்குகளை எரிய விட வேண்டாம், மின்சார சிக்கனத்தை கடைபிடியுங்கள்” – என அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த சிக்கலான நிலை குறித்து இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் எரிபொருள் இறக்குமதியில் அதிக அக்கறை செலுத்தவும், அனைத்து துறையினருக்கும் எரிபொருள் தங்குதடையின்றி அனுப்பி வைக்கவும் அதிபர் உத்தரவிட்டார். மேலும் வரும் 5ம் தேதி முதல் 16 மணி நேரம் மின்வெட்டு இருக்காது. மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
Advertisement