’இது 2K Kid-களின் காதல் கதை’ – கவின் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

நடிகர் கவினின் புதிய பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சூப்பர் ஹிட் அடித்த ‘மனம் கொத்தி பறவை’, ராஜுமுருகனின் கவனம் ஈர்த்த ‘ஜிப்ஸி’ உள்ளிட்டப் படங்களைத் தயாரித்த ஒலிம்பியா மூவிஸின் தயாரிப்பாளர் அம்பேத்குமார் தயாரிப்பில் கவின் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தினை, ’கடாரம் கொண்டான்’, ‘இரை’ வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் எம் செல்வாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கணேஷ் கே பாபு இயக்குகிறார். நவீனகால பின்னணியில் பொழுதுபோக்குடன் இப்படம் காதல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. கவின் உடன் அபர்ணாதாஸ், ‘முதல் நீ முடிவும் நீ’ புகழ் ஹரிஷ், ‘வாழ்’ புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கவுள்ளனர். நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிகர் கவின் ‘ஊர்குருவி’ படத்திலும் நடித்து வருகிறார்.

தயாரிப்பாளர் அம்பேத் குமார் படம் குறித்து பேசும்போது,

”ஒரு தயாரிப்பாளராக இருப்பதை விட, நான் எப்போதும் சிறந்த கதைகளுடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களின் ரசிகனாகவே இருந்து வருகிறேன். இயக்குநர் கணேஷ் கே பாபு இந்த திரைப்படத்தின் திரைக்கதையை கூறியபோது, உடனடியாக என் மனதை வெகுவாக கவர்ந்தது. 2கே கிட்ஸின் ரசனைக்கு ஏற்ற காதல் கதையாக முக்கிய அம்சமாக கேளிக்கையுடன் கூடிய திரைப்படமாக இருக்கும். அவர் இந்த காதல் கதையை மிக அழகான தருணங்களுடன், உணர்வுப்பூர்வமாக உருவாக்கியுள்ளார். கதையின் உணர்வுப்பூர்வமான அம்சங்கள், என்னை மிகவும் கவர்ந்தது.

இந்தப் படம் இளைஞர்களை மட்டுமல்ல, உலகளாவிய ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கை உள்ளது. தனது திரைவாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே ‘ஸ்டார் அந்தஸ்து’ பெற்றிருக்கும் நடிகர் கவின் வளர்ச்சியை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள அவரது கவனம், முயற்சிகள் மற்றும் அவரது அழுத்தமான நடிப்பு மூலம் திரைப்படத்திற்கு உயிர் கொடுப்பதும் என்னை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

image

image

கணேஷ் கதை சொல்லும் போது, கவின் நாயகனின் கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என தோன்றியது. படத்திலுள்ள மற்ற நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார்கள். கவின் இந்த திரைப்படத்தில் பங்குகொள்ள ஒப்புக்கொண்டது எனக்கு மகிழ்ச்சி, கவினின் நடிப்பு இயக்குநர் கணேஷின் அற்புதமான திரைக்கதைக்கு மேலும் அழகூட்டும்” என்று உற்சாகமுடன் பேசினார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 5 ஆம் தேதி முதல் துவங்கியுள்ளது. முழுப்படமும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது.

எழில் அரசு கே ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார், கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பைக் கையாள்கிறார், சண்முக ராஜ் கலை இயக்குநராகவும், சுகிர்தா பாலன் ஆடை வடிவமைப்பாளராகவும், அருணாச்சலம் சிவலிங்கம் ஒலி வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராக ஏபிவி மாறன் பணியாற்றுகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.