சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் உள்ளிட்ட 29 பேருக்கு 'நாரி சக்தி' விருது

சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் தாரா ரங்கசாமி உள்ளிட்ட 29 பேருக்கு நாரி சக்தி விருதுகளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவித்தார்.
நலிந்த மற்றும் விளிம்பு நிலை பெண்களில் சிறப்புமிக்க சேவைகளை செய்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக நாரி சக்தி விருதுகள் வழங்கப்படுகின்றன. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த விழா இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. அதில், நீலகிரியைச் சேர்ந்த தோடா சமூகத்தைச் சேர்ந்த கைவினைக்கலைஞர் ஜெயா முத்து, கைப்பின்னல் கலைஞர் தேஜம்மா ஆகியோர் 2020-ஆம் ஆண்டுக்கான நாரி சக்தி விருதினை கூட்டாகப் பெற்றனர்.
மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மனநல மருத்துவர் மற்றும் ஆய்வாளரான தாரா ரங்கசாமிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2021-ஆம் ஆண்டுக்கான நாரி சக்தி விருதை வழங்கி கௌரவித்தார். விழாவில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிரிதி இராணி, முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.