வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: கனமழை எச்சரிக்கை விலக்கம்

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்காமல் கடலிலேயே வலுவிழந்ததால், தமிழகத்துக்கான கனமழை எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:

வங்கக் கடலில் நிலவி வந்தகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்துவிட்டது. இது தற்போது மேலும் வலுகுறைந்து, மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவி வருகிறது. அதனால் தமிழகத்துக்கு ஏற்கெனவே விடுக்கப்பட்டிருந்த கனமழை எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.

வறண்ட வானிலை நிலவும்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பிப். 8-ம் தேதி (இன்று) தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். வரும் 9, 10, 11-ம்தேதிகளில் தமிழகம் மற்றும்புதுச்சேரி, காரைக்கால் பகுதி களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறையில் தலா 5 செ.மீ., தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கைஎதுவுமில்லை.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.