பால் கொள்முதல் விலையை உயர்த்துக: தமிழக அரசுக்கு வலியுறுத்தி உற்பத்தியாளர்கள் தீர்மானம்

சேலம்: ‘பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி தருவதோடு, அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்’ என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பொருளாளர் ராமசாமி மற்றும் சட்ட ஆலோசகர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனை மேம்படுத்த சங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டு பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட நிலையில், இதுவரை பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. விலைவாசி உயர்வு, பெட்ரோல் , டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் கால்நடைகளுக்கு தீவனங்களை வாங்க முடியாமல் உற்பத்தியாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் வழங்கி வருகின்றனர். அவர்களுக்கு பல மாதங்களாக நிலுவைத் தொகை வழங்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால், பால் உற்பத்தியாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, பால் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

ஆவின் நிறுவனங்களில் தேக்கமடைந்து உள்ள பால் பவுடர் போன்றவற்றை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதம பால் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பால் உற்பத்தியாளர்கள் பலரும் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.