துபாய் புர்ஜ் கலிபாவில் 'ஆர்ஆர்ஆர்' விழா

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ள பிரம்மாண்டப் படமான 'ஆர்ஆர்ஆர்' படம் மார்ச் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. முதலில் ஜனவரி 7ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கு முன்பாக இப்படத்திற்காக ஒவ்வொரு மொழி வெளியீட்டிற்கும் பிரம்மாண்டமான விழாக்களை படக்குழு நடத்தியது. ஆனால், கொரானோ பாதிப்பு காரணமாக பட வெளியீடு திடீரென தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது மார்ச் 25ம் தேதி வெளியாவதால் அதற்கு முன்பாக மீண்டும் சில விழாக்களை நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம். சர்வதேச அளவில் இன்னும் அதிக கவனத்தைப் பெற வரும் மார்ச் 18ம் தேதியன்று துபாயில் உள்ள உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிபாவில் இப்படத்தின் விழாவை நடத்தப் போகிறார்களாம். இதுவரை புரமோஷனில் கலந்து கொள்ளாத ஒலிவியா மோரிஸ் கூட இந்நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாகத் தெரிகிறது.

இந்த வருடம் வெளியாக உள்ள சில பான்-இந்தியா படங்களில் மிக அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் 'ஆர்ஆர்ஆர்' என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் சம்பந்தப்பட்ட விழாக்களுக்காக மட்டுமே தயாரிப்பாளர் 50 கோடி வரை பட்ஜெட் ஒதுக்கியுள்ளாராம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.