'மின்னணு வாக்கு இயந்திரம் தொடர்பான யுத்தம் நிற்காது' – அகிலேஷ் யாதவ்

புதுடெல்லி,

நாடு முழுவதும் வாக்குகளை பதிவு செய்ய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் தாங்கள் செலுத்திய வாக்கினை வி.வி.பாட் மூலம் சரிபார்க்க முடியும். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை வி.வி.பாட் சீட்டுடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துள்ளது. இந்நிலையில், மின்னணு வாக்கு இயந்திரம் தொடர்பான யுத்தம் நிற்காது என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்சில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வி.வி.பாட். மின்னணு வாக்கு இயந்திரம் மற்றும் வாக்குச் சீட்டு விவகாரம் குறித்து நீண்ட காலமாக பேசப்பட்டு வருவதாக தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டு என்ன தீர்ப்பு கொடுத்தாலும் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரிவித்த அவர், மின்னணு வாக்கு இயந்திரம் தொடர்பான யுத்தம் நிற்காது என்று குறிப்பிட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.