ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதியில் ஏவுகணை தாக்குதல்- 23 பேர் பலி

கிழக்கு உக்ரைனில் உள்ள டொனேட்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு பகுதி ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தப் பட்டு உள்ளதாக ரஷியா தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து ரஷியா கூறும்போது, “டொனேட்ஸ்க் பகுதியில் உக்ரைன் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்திருக்கிறார்கள். இந்த ஏவுகணை தாக்குதல் குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்பட்டு இருக்கிறது. இது போர் குற்றமாகும்” என்று தெரிவித்துள்ளது.

ரஷிய பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் இகோர் கோனசென்கோ கூறும்போது, “ஆயுதப்படை தாக்குதல் இல்லாத பகுதிகளில் இதுபோன்ற ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தி இருப்பது போர் குற்றம்” என்று தெரிவித்தார்.

இந்த தாக்குதல் தொடர்பாக ரஷிய தொலைக்காட்சி ஒன்று கூறும்போது, “பொதுமக்கள் பலர் ஏ.டி.எம். மற்றும் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஏவுகணை வீசி தாக்கப்பட்டதில் குழந்தைகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்” என்று தெரிவித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.