ராதேஷ்யாம் — 'ரெக்கவர்' ஆக வாய்ப்பில்லையா ?

பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்க 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக சொல்லப்பட்ட படம் 'ராதே ஷ்யாம்'. கடந்த வாரம் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியானது. தெலுங்கில் மட்டும் ஓரளவிற்கு சுமாரான வசூலைப் பெற்ற இந்தப் படம் மற்ற மொழிகளில் எதிர்பாராத விதத்தில் வசூலைப் பெற கடுமையாக தடுமாறி வருகிறது.

சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு இப்படத்தின் வியாபாரம் நடந்துள்ளதாக சொல்லப்பட்டது. முதல் மூன்று நாள் வசூலாக 151 கோடி ரூபாயை வசூலித்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக என்ன வசூல் என்று அறிவிப்பதை அந்நிறுவனம் நிறுத்திவிட்டது.

ஹிந்தியில் கடந்த ஐந்து நாட்களில் மொத்தமாக சுமார் 17 கோடி வரை இந்தப் படம் வசூலித்துள்ளதாக பாலிவுட் தகவல் வெளியாகி உள்ளது. பிரபாஸ் நடித்து கடைசியாக வெளிவந்த 'சாஹோ' படம் ஹிந்தியில் 100 கோடி வசூலித்தது.

200 கோடி ரூபாய் வியாபாரம் நடைபெற்றுள்ள நிலையில் படம் 'ரெக்கவர்' ஆவதற்கு இன்னும் 100 கோடி வரை வசூல் தேவைப்படுகிறதாம். அதற்கு வாய்ப்பில்லை என்றே திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆக்ஷன் எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு வெறும் காதலை மட்டுமே சொன்னதுதான் படத்தின் தோல்விக்குக் காரணம் என்று டோலிவுட்டினர் தெரிவிக்கிறார்கள்.

ஆனால், ஆரம்பம் முதலே இது ஒரு காதல் படம் என்றுதான் சொல்லி வந்தோம். அதில் வந்து ஆக்ஷன் எங்கே என்று விமர்சித்தால் என்ன சொல்வது, என இயக்குனர் ஆவேசப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.