பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் 2 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய ஹோலி: வண்ணப்பொடிகளை பூசி மகிழ்ந்த மக்கள்

சண்டிகர்: நாட்டில் பரவிய கொரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு, கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது, கொரோனா தொற்று வெகுவாக சரிந்து கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘வண்ணங்களின் பண்டிகை’ எனப்படும் ஹோலியை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நேற்று உற்சாகமாக கொண்டாடினர். 2 ஆண்டுகளுக்கு பின் கொண்டாடப்பட்டதால் வழக்கத்தை விடவும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா மாநிலங்களில் வெகுவிமரிசையாக ஹோலியை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்தந்த பகுதிகளில் உள்ள சாலைகள், தெருக்களில் திரண்ட மக்கள், தங்களது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மீது வண்ணப்பொடிகளை பூசி மகிழ்ந்தும், துப்பாக்கிகளில் வண்ணங்கள் கலந்த நீரை ஒருவர் மீது ஒருவர் பீய்ச்சி அடித்தும். வண்ணங்கள் நீர் நிரப்பப்பட்ட பலூன்களை பிறர் மீது உடைத்தும் மகிழ்ந்தனர். வாழ்த்துகளை பரிமாறி, குஜியா எனப்படும் பாரம்பரிய இனிப்பை பரிமாறிக் கொண்டார்கள். பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், முதல்வர்களும் குடும்பத்துடன் உற்சாகமாக இந்த பண்டிகையை கொண்டாடினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.