என்னை யாரு அம்மான்னு கூப்பிடுவாங்க! பள்ளி வாகனம் மோதி பலியான 7 வயது சிறுவனின் தாய் கதறல்


சென்னையில் பள்ளி வளாகத்திலேயே வாகனம் மோதி 7 வயது சிறுவன் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரைசேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி ஜெனிபர். இருவரும் ஐ.டி ஊழியர்கள்.

இவர்களது 7 வயது மகன் தீக்சித். இந்தச் சிறுவன் வளசரவாக்கம் அருகே ஆழ்வார்திருநகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.  

எதிர்பாராத விபத்து

நேற்று காலை 8.40 மணி அளவில் வழக்கம் போல, மாணவன் தீக்சித் பள்ளி வேனில் பள்ளிக்கு சென்றுள்ளான்.

வேனில் இருந்து இறங்கி வகுப்பறைக்குச் சென்றவன், தான் மறந்து வைத்துவிட்டு வந்த சாப்பாட்டுப் பையை எடுப்பதற்காக பள்ளி வேனை நோக்கி வந்துள்ளான்.

அப்போது ஓட்டுநர் பூங்காவனம், வேனை பார்க்கிங் செய்வதற்காக பின்னோக்கி இயக்கியுள்ளார்.  

அப்போது, மாணவன் மீது எதிர்பாராத விதமாக வேன் மோதியுள்ளது. இதில், வேனின்பின் சக்கரம் மாணவன் மீது ஏறி இறங்கியது.

இதில் படுகாயமடைந்த மாணவனை சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பள்ளி நிர்வாகத்தினர் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே தீக்சித் பரிதாபமாக உயிரிழந்தான்.  

64 வயதான ஓட்டுநரால் நேர்ந்த விபரீதம்

வேன் ஓட்டுநர் பூங்காவனம், வாகனப் பெண் பாதுகாவலர் ஞானசக்தி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

போலீசாரின் விசாரணையில், 64 வயதான ஓட்டுநர் பூங்காவனத்திற்கு ஒரு பக்க காது கேட்காது என்பது தெரியவந்துள்ளது.

மேலும் மாநகராட்சி வாகன ஓட்டுநராக இருந்துவிட்டு ஓய்வுக்குப் பின்னர் இந்தப் பள்ளியில் ஓட்டுநராகச் சேர்ந்து கடந்த 8 ஆண்டுகளாகப் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தனியார் பள்ளிக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், பள்ளி வாகனங்களுக்கு தனியாக பொறுப்பாளர் நியமிக்கப்படாதது ஏன்? 64 வயதானவரை வாகன ஓட்டுநராக நியமித்தது ஏன்? என்றும், வேன் மோதி சிறுவன் உயிரிழந்த நிலையில், பிற்பகல் வரை தாளாளர் பள்ளிக்கு வராதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி வளாகத்திற்குள் உள்ள பேருந்து வழித்தடத்தில் வேகத்தடைகளை அமைக்காதது ஏன்? என்றும் மாணவர்களை ஒழுங்குபடுத்தும் பணியை கவனிக்க தவறியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள பள்ளிக்கல்வித்துறை,

மாணவர்கள் வகுப்பறைகளுக்குச் சென்றடைந்தனரா என்பதை பள்ளி முதல்வர் கவனிக்க தவறியது ஏன்? உள்ளிட்ட 6 கேள்விகளுக்கும் பள்ளி நிர்வாகம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கதறி அழுத தாய் ஜெனிபர்

மருத்துவமனையில் மகனை பார்த்ததும் கதறிய ஜெனிபர், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் என்னுடைய ஒரே மகனை இழந்து தவிக்கிறேன், அவனுக்கு 7 வயது தான் ஆகிறது.

பள்ளிக்கு அனுப்பிவிட்ட 10 நிமிடத்தில் விபத்து நடந்துவிட்டதாக போன் செய்தார்கள், நாங்கள் செல்வதற்குள் என் மகன் இறந்துவிட்டான்.

அவன் வாய், மூக்கு, உடல் முழுக்க ரத்தமாக இருந்தது, என்ன நடந்தது என முழுமையாக தெரியவில்லை, அவனது வயிற்றில் வேன் ஏறி இறங்கியுள்ளது.

பள்ளி தாளாளரை கைது செய்தால் மட்டுமே உண்மை என்ன? என்பது தெரியவரும், அம்மான்னு கூப்பிட என் குழந்தை இல்லையே என கதறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.