ட்ரம்ப்பின் கணக்கை முடக்கிய நிலையில் இந்து மதத்தை அவமதிப்போரின் கணக்கை முடக்காதது ஏன்? – ட்விட்டருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ‘ஏத்திஸ்ட்ரிபப்ளிக்’ என்ற ட்விட்டர் கணக்கில் இந்து மதக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் தொடர்ச்சியாக பதிவுகள் போடப்பட்டுவந் துள்ளது. அந்தப் பதிவுகளை நீக்கவேண்டும் என்றும், அந்த ட்விட்டர்கணக்கை முடக்க வேண்டும் என்றும் ஆதித்யா சிங் தேஷ்வால் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் நவின் சாவ்லா அடங்கிய அமர்வு திங்கள்கிழமை அன்று இம்மனுவை விசாரித்தது. அப்போது, பிற மத மக்களின் உணர்வைப் புண்படுத்தும் கணக்குகளை நீக்குவதில் ட்விட்டர் அலட்சியம் காட்டுவதாக நீதிபதிகள் ட்விட்டர் நிறுவனத்தை விமர்சித்தனர்.

ட்விட்டர் நிறுவனம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் ‘புகாருக்கு உள்ளான ட்விட்டர் கணக்கின் ஆறு பதிவுகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. மேலும், அந்தப் பதிவுகள் தொடர்பில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ஒருவரின் கணக்கை முடக்க முடியாது’ என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், ‘அப்படியென்றால் நீங்கள் ஏன் டொனால்ட் ட்ரம்ப்பின் கணக்கை முடக்கினீர்கள்? உங்களுக்கு பிரச்சினையாக தோன்றும் பதிவுகள் மீது நடவடிக்கை எடுப்பீர்கள். ஆனால், உலகின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களின் உணர்வை புண்படுத்தும் பதிவுகள் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கமாட்டீர்கள். இதே விவகாரம் வேறு மதத்துக்கு நடந்திருந்தால் நீங்கள் நிச்சயம் மிகக் கவனமாக செயல்பட்டு இருப்பீர்கள்’ என்று விமர்சித்தனர்.

இந்திய ஐடி விதிகளை ட்விட்டர் பின்பற்றுமாறும் தனிநபர் கணக்கை முடக்குவது தொடர்பாகட்விட்டர் வகுத்துள்ள கொள்கைகளை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.