ஹிந்தியில் ரூ.100 கோடி வசூலைக் கடந்த 'ஆர்ஆர்ஆர்'

ஹிந்தித் திரையுலகில் தென்னிந்தியப் படங்கள் ரூ.100 கோடி வசூலைக் கடப்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் நேரடியாக எடுக்கப்படாமல் டப்பிங் ஆகி வெளியாகும் படங்கள் அந்த வசூலைப் பெறுவது பெரிய விஷயம்தான்.

அந்த விதத்தில் ரூ.100 கோடி வசூலைப் பெற்று ஹாட்ரிக் அடித்திருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி. இதற்கு முன்பு அவர் இயக்கிய 'பாகுபலி 1, பாகுபலி 2' ஆகிய படங்கள் 100 கோடி வசூலைக் கடந்த படங்களாக இருந்தன. இப்போது அவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படமும் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐந்தே நாட்களில் இந்த வசூலைப் பெற்று மீண்டும் ஆச்சரியப்படுத்தியுள்ளது 'ஆர்ஆர்ஆர்'.

முதல் நாள் வசூலாக 19 கோடி, இரண்டாவது நாளில் 24, மூன்றாவது நாளில் 32, நான்காவது நாளில் 17, ஐந்தாவது நாளில் 15 கோடி என 107 கோடி வசூல் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் ஹிந்தி வெளியீட்டு தியேட்டர் உரிமை 140 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த வார இறுதிக்குள்ளாக படம் எப்படியும் 150 கோடி வசூலைக் கடக்கலாம். அதற்குப் பிறகும் படம் வரவேற்புடன் ஓடினால் பெரிய லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் குறைவான லாபத்துடன் மட்டுமே 'ஆர்ஆர்ஆர்' ஹிந்தி வசூல் முடிவடையும் என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.