தெருவோர வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி! விரைவில் துவங்கும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு.!

தெருவோர வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி  நடப்பாண்டில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல், சட்டம் 2014 மற்றும் தமிழக அரசின் விதிகள் மற்றும் திட்டம் 2015ன்படி பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2017ம் ஆண்டு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்ட 27,195 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் உள்ள நகர விற்பனைக் குழுவின் மூலமாக 905 இடங்களில் விற்பனை செய்யக்கூடிய மண்டலங்களாகவும் (Vending Zones), 4,700 இடங்கள் விற்பனை செய்யக்கூடாத மண்டலங்களாவும் (Non-Vending Zones) கடந்த டிசம்பர் 2021ல் அறிவிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கடந்த 10-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவினை செயல்படுத்தும் பொருட்டு, அதன் விவரங்கள் அனைத்து மண்டல அலுவலங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களில் உள்ள அறிவிப்பு பலகையிலும், மாநகராட்சி இணையதளம் வாயிலாகவும் சாலையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விற்பனை மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட 905 இடங்களில் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வியாபாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

அவர்களுக்கு சம்பந்தப்பட்ட மண்டல நகர விற்பனைக் குழுவின் மூலமாக தெருவோர வியாபாரிகளின் சட்டத்தின்படி விற்பனைச் சான்றிதழ் (Certificate of Vending) வழங்கப்படவுள்ளது.

விற்பனை செய்யக்கூடாத மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு அங்கு தெருவோர வியாபாரம் மேற்கொள்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2014ன்படி குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். 

பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த 2017ம் ஆண்டு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு ஐந்து ஆண்டுகள் முடிவடையும் நிலையில் உள்ளதால், நடப்பு ஆண்டில் புதிதாக தெருவோர வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி, அடையாள அட்டை வழங்குதல், விற்பனை செய்யக்கூடிய மண்டலங்களில் அடிப்படை திட்டம் வகுத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள e-tender மூலம் Consultant-ஐ தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேற்படி கணக்கெடுக்கும் பணியினை பத்திரிகை, இணையதளம் வாயிலாக அனைவரும் அறியும் வகையில் பொது அறிவிப்பு வழங்கப்பட்டு, ஏற்கனவே விடுபட்ட தெருவோர வியாபாரிகளையும், புதிதாக வியாபாரம் செய்பவர்களையும் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

அனைத்து விற்பனை மண்டலங்களையும் புவி தகவல் அமைப்பு (Geographical Information System) அடிப்படையிலான Mapping செய்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

அவ்வாறு கண்டறியப்படும் சாலையோர வியாபாரிகளுக்கு உரிய அடையாள அட்டை மற்றும் விற்பனைச் சான்றிதழ் உடனடியாக வழங்கவும், மேலும் விற்பனை செய்யக்கூடிய மண்டலங்களில் சாலையோர வியாபாரிகளுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை NULM நிதியிலிருந்து ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.