ஃபோட்டோவை வைத்து மிரட்டிய கல்லூரி மாணவர் – மாணவி தற்கொலையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

ஆபாசப் படம் எடுத்து மிரட்டியதால், மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டநிலையில், குற்றவாளியை கண்டுபிடிக்க மாணவியின் செல்ஃபோன் உதவியுள்ளது.
கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், நேற்று முன்தினம் தனது தாய்க்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டார். கடிதத்தில், “நான் நீண்ட நாள் வாழ ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கு வழி இல்லை. என்னை ஒருவன் ஆபாச படம் எடுத்து வைத்து, பிளாக்மெயில் செய்கிறான். எனவே வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்வதாக” அந்தக் கடிதத்தில் மாணவி எழுதி இருந்தார்.
ஆனால், பிளாக்மெயில் செய்யும் நபர் குறித்து எந்தவிதமான தகவலையும், அந்த மாணவி கடிதத்தில் தெரிவிக்கவில்லை. இதையடுத்து உயிரிழந்த கல்லூரி மாணவியின் குடும்பத்தினர், இது சம்பந்தமாக அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அந்தக் கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
image
மாணவி பயன்படுத்திய மொபைல் மூலமாக போலீசார் விசாரணையை தொடங்கினர். தற்கொலை செய்துகொண்ட மாணவியின் செல்ஃபோனுக்கு யார் யாரெல்லாம் அடிக்கடி போன் செய்துள்ளனர் என விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணையில், ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான லோகநாதன் என்பவரை, போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், தற்கொலை செய்து கொண்ட மாணவியும், லோகநாதனும் காதலித்து வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்தினர், வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு மாப்பிள்ளைக்கு இந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதனால்  காதலித்து வந்த கல்லூரி மாணவர் லோகநாதனின் தொடர்பை அம்மாணவி துண்டித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த லோகநாதன், அவ்வப்போது தொடர்பு கொண்டு என்னுடன் இருந்த புகைப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என அடிக்கடி மாணவியை மிரட்டியதாகத் தெரிகிறது.
image
இதையடுத்து பயந்துபோன அந்த மாணவி என்ன செய்வதென்று தெரியாமல், தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை விசாணையில் தெரியவந்துள்ளது- அண்ணாமலை காவல் நிலைய காவல்துறை விசாரணையில் லோகநாதன் வாக்குமூலமாக இதனைத் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதனையடுத்து அம்மாணவன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.