மனநலம் பாதித்த பெண்ணை பலாத்கார முயற்சி: வாலிபர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, பலாத்காரம் செய்ய முயற்சித்த வாலிபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அடுத்த கருணாகரச்சேரியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் அப்பு (எ) பிரதாப் (26). வாடகை கார் டிரைவர். அதே பகுதியில் சுமார் 38வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வசிக்கிறார். இந்நிலையில், நேற்று காலை பிரதாப், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு சென்றார். அங்கு தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அந்த பெண் அலறி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். இதை பார்த்ததும், பிரதாப் அங்கிருந்து தப்பியோட முயன்றார். உடனே அவரை மடக்கி பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை, செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.இன்ஸ்பெக்டர் சித்ராதேவி வழக்குப்பதிவு செய்து, பிரதாப்பை கைது செய்தார். பின்னர் அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.