இலங்கையில் பல்கலை. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்- கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைத்த போலீசார்

கண்டி:
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு பெரும்பாலும் இறக்குமதியை நம்பி இருந்த நிலையில், அன்னியச் செலாவணியில்லாததால், இறக்குமதி பாதித்தது. உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடிவருகிறார்கள்.
 
போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் அவசர நிலையை அமல்படுத்தினார். நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நாட்டில் போராட்டங்களைத் திட்டமிடுவதற்கு மக்களைத் திரட்டுவதைத் தடுக்கவும் சமூக வலைதளங்களை அரசு முடக்கியுள்ளது. இதனால் போராட்டம் ஓரளவு தணிந்துள்ளது.
இந்நிலையில், கண்டி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்தை கலைக்க கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். மாணவர்கள் மீது தண்ணீரையும் பீய்ச்சியடித்தனர்.
மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அருகில் இருந்து கண்டி நகரம் வரை ஆர்ப்பாட்ட பேரணி நடத்த முயன்றதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் பெரும்பாலானோர் போலீசாரின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கலைந்து சென்றுள்ளனர். அதேசமயம், மீண்டும் அங்கு போராட்ட சூழல் உருவாவதை தடுக்க, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.