கரோனா தாக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளால் உழலும் மக்கள் மீது சொத்துவரி சுமையா?: வைகோ வேதனை

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள சொத்துவரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

600 சதுரடிக்குக் குறைவான பரப்பளவு உள்ள கட்டிடங்களுக்கு 25 சதவிகித சொத்துவரி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் புதியதாக இணைந்த பகுதிகளில் 600 முதல் 1200 சதுரடி பரப்பளவு கொண்ட குடியிருப்புகளுக்கு 50 சதவிகிதம் சொத்துவரி உயர்த்தப்படுகிறது. சென்னையின் முக்கிய பகுதிகளில் 600 முதல் 1200 சதுரடி பரப்பளவு கொண்ட குடியிருப்புகளுக்கு 75 சதவிகிதமும், 1200 லிருந்து 1800 சதுரடி கொண்ட குடியிருப்புகளுக்கு 100 சதவிகிதமும் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் 15 ஆவது நிதி ஆணையம் கொடுத்த நிபந்தனைகளின் அடிப்படையில் சொத்துவரி உயர்த்தப்படுவதாகவும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்துவரியை உயர்த்த நிதி ஆணையம் அறிவுறுத்தி உள்ளதாகவும் தமிழக அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரானா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம், பொருளாதார வீழ்ச்சி மற்றும் வேலையின்மையால் மக்கள் சொல்லொணா வேதனையில் வாழ்க்கையை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு தாறுமாறாக உயர்த்தியதால் மக்கள் மீதான சுமை அதிகரித்து விட்டது.

இந்நிலையில் சொத்துவரி உயர்வும் மக்களை பாதிக்கும். எனவே இதனை மறுபரிசீலனை செய்து,சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.