எரிபொருள் விலை உயர்வு – தொடர் அமளியால் இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி:
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடிய நிலை காணப்படுகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை உயர்வால் பொதுமக்களும் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், பாராளுமன்ற மேலவை இன்று கூடியதும் அவை உறுப்பினர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கவனத்தில் கொண்டும் கோஷங்களை எழுப்பி அவையில் அமளியில் ஈடுபட்டனர்.
அவர்களை அமரும்படி அவைத்தலைவர் கூறினார். ஆனாலும், உறுப்பினர்கள் தொடர்ந்து அவை நடவடிக்கையை முடக்கியதால் மேலவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மீண்டும் அவை நடவடிக்கையை முடக்கினர். எரிபொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபாநாயகர் மாநிலங்களவையை பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைத்தார்.
இதேபோல், மக்களவையிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் மக்களவையும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.