தங்கவயல் : ”பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் தங்கச் சுரங்க தொழிலாளர்கள் வசித்து வரும் வீடுகளை அவரகளுக்கே சொந்தமாக்க வேண்டும்,” என்று கர்நாடக மாநில தி.மு.க., அமைப்பாளர் ராமசாமி வலியுறுத்தினார்.
தங்கவயல் தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் மாநில அமைப்பாளர் ராமசாமி தலைமையில், மாநில துணை அமைப்பாளர்கள் ராஜேந்திரன், ராமலிங்கம், பொருளாளர் தட்சிணாமூர்த்தி முன்னிலையில் ராபர்ட்சன்பேட்டை கிங் ஜார்ஜ் அரங்கில்நடந்தது.தங்கவயல் நகர பொறுப்புக்குழு உறுப்பினர் முனிரத்தினம் வரவேற்றார். அவர் பேசுகையில், ” தங்கவயல் நகர பிரச்னைகளில் தி.மு.க., தலையிடும். தேசிய பிரச்னைகளிலும் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். தங்கவயலில் காலியாக உள்ள ஆயிரம் ஏக்கரில் புதிய தொழிற்சாலை அமைக்க கோருவோம். இங்கு நகர அலுவலகம் கட்டுவதற்கு மாநில தலைமை ஒத்துழைக்க வேண்டும்,” என்றார். பொறுப்புக்குழு உறுப்பினர் அறிவழகன் பேசுகையில், ”தங்கவயலில் மறைந்த தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா, ஜூன் 3ல் நடக்கிறது. இதற்கு அனைவரின் பங்களிப்பு தேவை,” என்றார். மாநில முன்னாள் துணை அமைப்பாளர் கலையரசன் பேசுகையில், ”தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் தங்கவயலில் தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. பேச்சாளர்களை விட செயல்படுபவர்கள் தான் தேவையாக உள்ளனர்.போராட்டம் ”தங்கவயலில் மக்கள் பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி, போராட்டம் நடத்த முன் வரவேண்டும். நகராட்சியில் அதிகாரிகள் போக்கு சரியில்லையென நகராட்சி தலைவரே கூறியுள்ளார்,” என்றார். மாநில முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர் ஆதித்தன் கூறுகையில், ”தங்கவயல் தி.மு.க., நிர்வாகத்தை, தலைமை ஏற்படுத்த வேண்டும். அதற்காக மாநில நிர்வாகம் அக்கறை காட்ட வேண்டும்,” என்றார்.மாநில தி.மு.க., அமைப்பாளர் ராமசாமி கூறியதாவது:மின்னொளி காடு, மேடாக இருந்ததை நகரமாக்கினவர் தங்கவயல் தமிழர். இது தமிழர்களின் பூர்வீக இடம். முதன் முதலாகதங்கவயல் நகரம் தான் மின்னொளி கண்டது.தமிழரின் தொகுதி உழைப்பால் உயர்ந்த தங்கவயல் நகரில் தங்கம் இருந்தும் எடுக்க ஆளும் அரசு தயாரில்லை. தமிழர் என்பதால் தேசிய கட்சிகள் உதவிட விரும்புவதில்லை.தங்கவயல் தமிழரின் தொகுதி. கர்நாடகாவில் தி.மு.க. வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழர்கள் எம்.எல்.ஏ.,வாக ஆகக்கூடாது என்பதற்காகவே, 170 கிராமங்களை இணைத்து வெற்றிப்பெற முடியாமல் ஆக்கிவிட்டனர்.வீடற்றவர்களுக்கு 10 கோடி பேருக்கு வீடு கட்டித் தருவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் பல தலைமுறையினராக வசித்து வருகின்றனர். வீடற்ற இத் தொழிலாளர் வசிக்கும் வீடுகளை, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் சொந்தமாக்க வேண்டும்.மாநில வீட்டு வசதிக் துறை அமைச்சர் சோமண்ணாவும் வீடுகள் சொந்தம் ஆக்குவது தொடர்பாக முயற்சிக்கலாம் என்று கூறினார். எனவே வீடற்ற தொழிலாளர் குடும்பங்களுக்கு வீடுகள் கிடைக்க தி.மு.க., எம்.பி.,க்கள் மூலம் வலியுறுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.அறிவழகன், பெருமாள், வக்கீல் மணிவண்ணன், அருணாசலம், சேரன், கார்த்திக், கணேஷ், கரிகாலன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Advertisement