திருமலை: ஆந்திராவில் புதிதாக வாங்கிய புல்லட்டிற்கு கோயிலில் பூஜை செய்தபோது வெடித்து சிதறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரா. இவர் சமீபத்தில் புதிதாக புல்லட் பைக்கை வாங்கினார். அந்த புல்லட்டில், ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் வசிக்கும் தனது நண்பர் வீட்டிற்கு நேற்று வந்திருந்தார். தொடர்ந்து. புல்லட்டிற்கு பூஜை செய்ய முடிவு செய்து, குந்தக்கல் மண்டலம், கசபுரம் கிராமத்தில் உள்ள நெட்டிகண்டி ஆஞ்சனேயர் கோயிலுக்கு சென்றார். அங்கு, கோயிலின் வெளியே தனது புல்லட்டை நிறுத்திவிட்டு பூஜை செய்தார்.அப்போது, அந்த புல்லட் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், புல்லட் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பி இருந்த நிலையில், பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால், அங்கிருந்த மக்கள் நாலாபுறமும் அலறியடித்து ஓடினர். சிலர் அருகில் இருந்த வாகனங்களுக்கு தீ பரவாமல் தடுக்க, பற்றி எரிந்த புல்லட்டை விரைந்து அணைத்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. புல்லட் திடீரென தீப்பிடித்து எரிந்தததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதிதாக வாங்கிய புல்லட் வெடித்து சிதறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.