மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா திருக்கல்யாண உற்சவத்தை காண வரும் பக்தர்கள் வரும் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஆன்லைன் மற்றும் நேரடியாக முன்பதிவிற்காக விண்ணப்பிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி திருக்கல்யாண உற்சவத்தை தரிசிக்க 500 ரூபாய் கட்டணச் சீட்டு 2500 பக்தர்களுக்கும், 200 ரூபாய் கட்டணச் சீட்டு 3200 பக்தர்களுக்கு வழங்க உள்ளது. பக்தர்கள் WWW.maduraimeenakshi.Org என்ற இணையதளம் மூலமாகவும், மீனாட்சியம்மன் கோவில் மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கு விடுதி அலுவலகத்திலும் நேரடியாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
கட்டண தரிசனத்திற்கு முன்பதிவு செய்யக்கூடிய பக்தர்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை, லைசென்ஸ், ரேசன்கார்டு, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவண நகல் மட்டும் செல்போன் எண், மெயில் ஐடிகளை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கல்யாண உற்சவத்தன்று இலவச தரிசனம் செய்யக்கூடிய பக்தர்கள் கோவிலின் தெற்கு கோபுர நுழைவாயில் வழியாக முதலில் வருகை தரக்கூடியவர்கள் அனுமதிக்கப்பட்டு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், முன்பதிவிற்கான நேரடி விண்ணப்ப படிவங்களை இணையதளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம் எனவும், 500 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு ஒருநபர் இரு அனுமதி சீட்டும், 200 ரூபாய் கட்டணத்திற்கு ஒரு நபருக்கு 3 அனுமதி சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்து தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு வரும் 13ஆம் தேதி கட்டண அனுமதி சீட்டுகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இரு ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதியின்றி சித்திரை திருவிழா நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் கட்டண அனுமதி சீட்டு முறையில் அனுமதிக்கப்படவுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM