யஷ்ஷின் ‘கேஜிஎஃப் 2’ திரைப்படம் கிரீஸில் வெளியாகி சாதனைப் படைக்கவுள்ளது.
’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகவுள்து. யஷ்ஷுடன் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி, மாளவிகா அவினாஷ், ரவீனா டண்டன், அர்ச்சனா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். சமீபத்தில், ‘கேஜிஎஃப் 2’ படத்தின் முதல் பாடலும் ட்ரெய்லரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
‘அவன் கத்தி வீசுன வேகத்துல ஒரு புயலே உருவாகிடுச்சி சார்’.. ‘ரத்தத்துல எழுதன சரித்திரம் இது. மையால தொடர முடியாது’, ‘எனக்கு வன்முறை பிடிக்காது. நான் அதனைத் தவிர்க்கிறேன். ஆனால், வன்முறைக்கு என்னைப் பிடிச்சிருக்கு. அதனால், என்னால அதை தவிர்க்க முடியாது’ என்று படத்தின் நாயகன் யஷ் பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் புயலை உண்டாக்கியது. அந்தளவுக்கு ‘கேஜிஎஃப் 2’ படத்தின் மேக்கிங் பாடல்களிலும் ட்ரெய்லரிலும் மிரட்டி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. அதோடு, விஜய்யின் ‘பீஸ்ட்’ வரும் 13 ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாவதால் இரண்டு படங்களுக்குத்தான் இந்தியளவில் பெரிய போட்டி என்று ரசிகர்களால் கருதப்படுகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாவதாக இருந்த ’ஃபாரஸ்ட் கம்ப்’ ரீமேக் அமீர்கானின் ‘லால் சட்டா சிங்’ படத்தின் வெளியீடே இதனால் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘கேஜிஎஃப் 2’ மேலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளது. கிரீஸ் நாட்டில் வெளியாகும் முதல் தென்னிந்தியப் படம் என்ற கெத்தான அடையாளத்தைப் பெற்றுள்ளது. ரஜினி, விஜய், அஜித், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு,ஃபகத் பாசில் என பல தென்னிந்திய நடிகர்களின் படங்கள் உலகம் முழுக்க வெளியாகிறது. ஆனால், இதுவரை தென்னிந்தியாவிலிருந்து எந்தப் படமும் கிரீஸில் வெளியானதில்லை. தற்போது, கிரீஸ் நாட்டில் ‘கேஜிஎஃப் 2’ முதல் படமாக வெளியாவதை பெருமையுடன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. யஷ் ரசிகர்கள் மேலும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.