ஏப்ரல் 7 வரை ஊரடங்கு – மாநில அரசு திடீர் உத்தரவு!

ராஜஸ்தான் மாநிலத்தின் கரௌலியில் ஊரடங்கு உத்தரவை வரும் 7 ஆம் தேதி வரை நீட்டித்து, அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் கரெளலியில் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் ஹிந்து சமூகத்தினர் நடத்திய இருசக்கர வாகன ஊர்வலம், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கரெளலி பகுதிக்கு வந்த போது ஹிந்துக்களின் ஊர்வலத்தின் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். தொடா்ந்து நிகழ்ந்த வன்முறையில் இருசக்கர வாகனங்கள், கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 35 போ் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக ஏப்ரல் 2 ஆம் தேதி மலை 6.30 மணி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை கரௌலியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத ஊர்வலத்தின் போது கல் வீசப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான் காவல் துறை 46 பேரைக் கைது செய்தது. மேலும் இது தொடர்பாக விசாரிக்க ஏழு பேரை விசாரணைக்காகக் காவலில் வைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் ஞாயிற்றுக்கிழமை மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், மக்களின் நலன் கருதி வன்முறையைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை வரும் 7 ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.

மேலும் கரெளலியில் மறு உத்தரவு வரும் வரை இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே இந்த வன்முறைக்கு காரணமாகக் கருதப்படும் சுயேச்சை கவுன்சிலர் மட்லூம் அகமது என்பவர் மீது வழக்கப் பதிவு செய்யப்பட்டு அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

அடுத்த செய்திரம்ஜான் பண்டிகை: அரசு ஊழியர்களுக்கு செம அறிவிப்பு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.