கொரோனா மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு

புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தார். அப்போது, மருந்துகளுக்கான சரக்கு மற்றும் சேவைவரி (ஜி.எஸ்.டி.) குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

அதாவது, கொரோனா பெருந்தொற்று தொடங்கியபோது, அனைத்து மருந்துகளின் விற்பனையின்போது 5 முதல் 12 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்க முடிவு செய்யப்பட்டது. கொரோனாவுக்கான மருந்துகள் மற்றும் அதன் சிகிச்சை உபகரணங்களுக்கான ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைக்கப்பட்டது என்றார்.

மருத்துவ காப்பீட்டுக்கான ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக உள்ளது. இது சர்வதேச தர அளவீட்டின்படியானது. கொரோனா தொற்று காலத்துக்கு முன்பிருந்தே மருத்துவ காப்பீட்டுக்கு இந்த அளவுதான் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. அதேநேரம், மருத்துவ காப்பீட்டு பாலிசிகளில் மூத்த குடிமக்கள் ரூ.1 லட்சம் வரை வரிவிலக்கு பெறலாம்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மற்றும் வரி விலக்குகள் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகின்றன. மருத்துவ காப்பீட்டுக்கான ஜி.எஸ்.டி.யை குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரைக்கவில்லை என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.