பெண் குழந்தைக்காக ஹெலிகாப்டர் – குட்டி தேவதையை கொண்டாடிய தந்தை!

பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் விதமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் தம்பதி தங்களது குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள ஷெல்காவோன் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் விஷால் ஜரேகர் என்பவரது மனைவிக்கு, கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு விஷால் ஜரேகரின் மனைவி, போசாரி என்ற பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், தங்களது குடும்பத்தில் பல தலைமுறைகளாகப் பெண் குழந்தையே இல்லை என்றும், முதன்முறையாக பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் விதமாக ஒரு லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து குழந்தையை போசாரியில் இருந்து ஷெல்ஹாவோனில் உள்ள தனது வீட்டிற்கு விஷால் ஜரேகர் அழைத்து வந்தார்.

போசாரி பகுதியில் உள்ள மாமியார் வீட்டில் இருந்து, பெண் குழந்தை மற்றும் மனைவியை ஹெலிகாப்டரில் ஏற்றி தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு வசதியாக தனது விவசாய நிலத்தில் தற்காலிக ஹெலிபேடும் அமைத்திருந்தார். இந்த நிகழ்வை அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்தனர்.

இது குறித்து குழந்தையின் தந்தை விஷால் ஜரேகர் கூறும்போது, எங்கள் மொத்த குடும்பத்திலும் ஒரு பெண் குழந்தை கூட கிடையாது. அதனால், எங்கள் மகளை வீட்டிற்கு சிறப்பாக வரவேற்று வர வேண்டும் என நினைத்தோம். அதற்காக, ரூ.1 லட்சத்திற்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அதில் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தோம் என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.