ஜாதி டைட்டிலை நீக்கிய தணிக்கை குழு

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் படம் வாய்தா. வராஹ ஸ்வாமி பிலிம்ஸ் சார்பில் கே. வினோத்குமார் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகளில் ஒருவரான சி. மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் நாயகனாக அறிமுகமாகிறார்.

அவருக்கு ஜோடியாக பவுலின் ஜெசிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் பேராசிரியர் மு. ராமசாமி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஆர்.ஜே. சேது முருகவேல் அங்காரகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சி.லோகேஸ்வரன் இசை அமைத்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மகி வர்மன் பேசியதாவது: ஒரு விபத்தில் சிக்கிய முதியவர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்கிறார். அவருக்கு ஏற்படும் அனுபவங்களே படம். இந்தப் படத்தை முதலில் 'ஏகாலி' என்ற பெயரில் சுயாதீன திரைப்படமாக தான் உருவாக்க வேண்டும் என நினைத்தோம். நல்ல தயாரிப்பாளர் கிடைத்ததால் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறோம்.

கடின உழைப்பிற்குப் பிறகு படத்தின் பணிகளை நிறைவு செய்து தணிக்கை குழுவிற்கு சென்றோம். ஏகாலி என்ற பட தலைப்பை பதிவு செய்யும்போது தயாரிப்பாளர் சங்கத்தில் இது ஒரு குறிப்பிட்ட ஜாதியை குறிக்கிறது. அந்த சாதிய அமைப்புகளிடம் இருந்து தடையில்லா சான்றிதழை வாங்கி வாருங்கள் என அறிவுறுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள குறிப்பிட்ட சமூகத்தின் அமைப்பிலிருந்து தடையில்லா சான்றிதழை வாங்கி தலைப்பை பதிவு செய்தோம். அப்போதிருந்தே இந்த படத்திற்கு பிரச்சனை தொடங்கியது.

தணிக்கைக் குழுவினர் இந்த ஏகாலி என்ற வார்த்தையையும், தலைப்பையும் மாற்றும்படி அறிவுறுத்தினர். அதன் பிறகு தயாரிப்பாளருடன் விவாதித்து 'வாய்தா' என தலைப்பை வைத்தோம். இது மக்களுக்கான படைப்பு. மக்களுக்கான அரசியல் பேசும் 'வாய்தா' படத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.