23YearsOfPadaiyappa:` நான் வந்துட்டேன் கண்ணா'னு ரஜினி சார் சொன்னார்- படப்பிடிப்பு பற்றி ரமேஷ்கண்ணா

ரஜினி, ரம்யாகிருஷ்ணன், கே.எஸ்.ரவிகுமார் என பலருக்கும் ‘படையப்பா’ ரொம்பவே ஸ்பெஷல் படம்தான். ‘என் வழி… தனி வழி…’, ‘ஆண்டவனே நம்ம பக்கம்தான் இருக்கான்’ போன்ற எவர்க்ரீன் வசனங்கள் கொண்ட ‘படையப்பா’ படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆகிறது. அதில் படையப்பாவாக ரஜினி கம்பீரமென்றால்.. நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணன் மிரட்டலாக நடித்திருந்தார். ரஜினியிடம் அவர் சொல்லும் ‘எல்லாருக்கும் உன்ன ஏன் பிடிச்சிருக்கு தெரியுமா.. வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னை விட்டு போகல’ டயலாக், இப்போதும் சமூக வலைதளங்களில் வைரலாகின்றன. இப்படத்தில் ரஜினியுடன் காமெடியில் கலக்கியதுடன், இணை இயக்குநராகவும் வேலை செய்திருந்த ரமேஷ் கண்ணாவிடம் படம் குறித்துப் பேசினேன்.

ரமேஷ் கண்ணா..

”இந்தப் படத்துல நான் உள்ள வந்ததே, சுவாரஸ்யமான விஷயம். அப்ப நான் விக்ரமன் சாரோட ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ல நடிச்சிருந்தேன். என் காமெடி செம ரொம்பவே ரசிக்கப்பட்டது. அந்த சமயத்துல நான் கே.பாலசந்தர் சாரோட கதை விவாதங்களுக்குப் போவேன். அவர் எனக்கு ஒரு பேஜர் வாங்கிக் கொடுத்திருந்தார். அந்த பேஜரில் இருந்து ஒரு மெசேஜ். ‘போன் பண்ணுங்க’ – ரஜினி. அப்படீனு வந்திருந்தது. அப்ப என்கிட்ட போன் கிடையாது. என் நண்பர் தேனப்பன் ஆபீஸுக்கு போய், ரஜினி சாருக்கு போன் பண்ணினேன். “ரமேஷ்கண்ணா பிரமாதம், படத்தைப் பத்தி எல்லாரும் பேசுறாங்க. நல்ல டாக்… அந்தப் படத்தை போட்டுக் காண்பிங்க. நான் குடும்பத்தோட வந்து பாக்கறேன்.” னு சொன்னார். அப்புறம் தேனப்பன் சாரே, எனக்காக தயாரிப்பாளர்கள்கிட்ட பேசி, ஸ்கீரின் பண்ண வச்சார். ரஜினி சார் படம் பார்த்துட்டு சந்தோஷப்பட்டார். ‘சூப்பரா பண்ணியிருக்கீங்க. என் ஃபேமிலிக்கும் படம் பிடிச்சிடுச்சு. நாம அடுத்தப் படம் பண்றோம். நீங்க நடிக்கிறீங்க’ன்னார். ‘நடிக்கறது என்ன சார்.. உங்க படத்துல அசிஸ்டென்ட் டைரக்டரா ஒர்க் பண்ணினா, நூறு படம் ஒர்க் பண்ணின மாதிரினு அவர்கிட்ட சொன்னதும் ரசிச்சு சிரிச்சிட்டார். நான் அசிஸ்டென்ட்டா ஒர்க் பண்ணின கடைசி படம் ‘படையப்பா’ தான். அப்புறம் நடிகரா பிஸியாகிட்டேன். ‘படையாப்பா’வில் லவ் லட்டர் காமெடி நான் எழுதினதுதான். சவுந்தர்யாவுக்கு லவ் லட்டர் கொடுக்க முயற்சி பண்ணிட்டேன் இருப்பேன். ஒரு கட்டத்துல சௌந்தர்யாவுக்கு கல்யாணம் நிச்சயமாகியிடும். அப்ப அந்த லவ் லட்டரை கொடுத்து ‘படையப்பா உன்னை லவ் பண்றார்’னு சொல்லுவேன். உடனே ரஜினி சார், ‘கல்யாணமே ஆகப்போகுது.. இப்ப கொண்டு வந்து குடுக்கப்போறியே’னு கலாய்ப்பார். அந்த காமெடியை ரசித்த ரஜினி சார் என்னைக் கூப்பிட்டார்.

ரஜினி கூட்டணியில் ரமேஷ் கண்ணா

‘காமெடி நல்லா இருக்கு. ஆனா, ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ல நீங்க சென்டிமென்ட்லேயும் கலக்கியிருப்பீங்க. இப்ப இருக்கற காமெடி நடிகர்கள் பலருக்கு (விவேக்- வடிவேலு டைம்ல) சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகாது. உங்களுக்கு சென்டிமென்ட் நல்லா ஒர்க் அவுட் ஆகுது. அதனால அந்த லவ் லட்டரை நான் கிழிச்சு போட்டுடுறேன்… நீங்க சோகமாகிடுங்கனு ஐடியா கொடுத்து பண்ண வச்சது ரஜினி சார்தான். ‘படையப்பா’வும் எனக்கு பெரிய ரீச்.

அதேபோல, அந்த படத்து இணை இயக்குநரா வேலை செஞ்ச அனுபவமும் அருமையான தருணமாகிடுச்சு. அதுல நான் நடிகர்களோட ஷெட்யூல் கவனிச்சிட்டிருந்தேன். அப்ப நாங்க மைசூர்ல தங்கியிருந்தோம். அங்கிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள மாண்டியால காலையில ஏழு மணிக்கு ஷாட் வச்சிருந்தாங்க. நான் ரவிக்குமார் சார்கிட்ட காலையில ஏழு மணிக்கு ரஜினி சாரால எப்படி வரமுடியும்னு கேட்டேன். ‘நான் கண்டிப்பா வந்திடுவேன்’னு ரஜினி சாரும் சொன்னார். மறுநாள் நாங்க மாண்டியா போனோம். காலையில யாருமே வரல. இடமே வெறிச்சோடி இருக்கு. அங்கே இருந்த ஒரு திண்ணையில தலையில கர்சீப் மட்டும் போட்டு மூடியபடி ஒருத்தர் படுத்து இருந்தார். அவர் பக்கத்துல உட்கார்ந்தபடி, என்னோட வந்தவர்கிட்ட ‘நான் சொல்லல.. ரஜினி சார் வரமாட்டார்னு… காலையில இவ்வளவு தூரம் பயணிக்கறதுல லேட் ஆகுமே.. இனிமேதான் வருவார் பாரு..’னு சொல்லிட்டு இருந்தேன். அப்ப டக்குனு ஒரு குரல்.. படுத்திருந்த ஆள் எழுந்து.. ‘ரமேஷ்கண்ணா, நான் வந்துட்டேன் கண்ணா’ன்னார். 23 வருஷம் இவ்ளோ வேகமா ஓடினது.. நம்பவே முடியல. அப்படியே நினைவுகள் இன்னும் நேத்து நடந்தது போல இருக்கு” என ஆச்சரியமானார் ரமேஷ்கண்ணா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.