"தேவையில்லாத அரசியலை புகுத்தி பாஜகவை வளர்க்க நினைப்பதா?"- முதல்வர் ஸ்டாலின்

“அரசின் மீது மாய பிம்பத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைத்தால், யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் அஞ்சமாட்டார்” என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது குறித்து கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “அயோத்தியா மண்டபத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக 2004ல் இருந்தே புகார்கள் உள்ளது. 2013ல் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிராக செயல்பட்டதாக தெரியவந்தது. தொடர்ந்து, சிவசுப்ரமணிய கோயில் செயல் அலுவலர், இந்த அயோத்தி மண்டபத்தின் தக்கராக நியமிக்கப்பட்டார். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
image
இதனால், தக்கர் நியமனம் செல்லுபடியானது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை உயரதிகாரிகள், ஸ்ரீராம சமாஜத்திற்கு சென்று ஆய்வு நடத்த முற்பட்ட போது, அங்கிருந்த 50-60 க்கும் மேற்பட்டோர் கூட்டமாக சேர்ந்து பூட்டுபோட முயன்றனர். இவர் சார்ந்த கட்சி (பாஜக) தலைவர் தலைமையில் அங்கு கூடினர். சிலர் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது.
அங்கு திருமண மண்டபம், காரிய கொட்டகை ஆகியவைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவந்தது. குறிப்பாக இந்தியாவிலேயே குளு குளு ஏசி வசதியுடன் உள்ள காரிய கொட்டகை அங்கு தான் உள்ளது. ஒரு சதுர அடிக்கு 60 ரூ வசூலிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட கூட்டம் பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். மேலும் அங்கு சிலை இல்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ராமர், சீதை மற்றும் அனுமார் உள்ளிட்ட சிலைகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அரசின் மீது மாய பிம்பத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைத்தால், யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் அஞ்சமாட்டார்” எனத் தெரிவித்தார்.
image
இதற்கிடையே பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அயோத்தியா மண்டப பிரச்னையில் அரசியலைப் புகுத்தி கட்சியை வளர்க்க நினைத்தால் அது நடக்கவே நடக்காது. தேவையின்றி அரசியல் செய்வது, எந்தவகையிலும் பாஜகவை பலப்படுத்தாது. ஏழை, எளிய மக்கள் பாதிக்கக்கூடிய விஷயத்தில் பாஜக கவனம் செலுத்த வேண்டும். பாஜக தரப்பு பெட்ரோல், டீசல், கேஸ் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும். மாநிலத்திற்கு வர வேண்டிய நிதியை பெறுவதற்கு பாஜக உறுப்பினர்கள் உறுதுணையாக இருக்கவும். அதைவிடுத்து, தேவையின்றி அரசியலை புகுத்தி, பாஜகவை பலப்படுத்த வேண்டும் என நினைத்தால் அது நடக்காது” என்றார்.
சமீபத்திய செய்தி: அதிக நேரம் அமர்ந்தே இருப்பது ஆபத்தா? – நிபுணர் விளக்கம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.