நாட்டு மக்களின் அமைதியான போராட்டம் எதுவாக இருந்தாலும் அதனை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு – காலி முகத்திடல் பகுதியில் பெரும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய அந்த பகுதியில் பொலிஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டன.
இது குறித்த தகவல்கள் சமூக ஊடகங்கள் வெளியாகி, அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, பொலிஸ் வாகனங்கள் அங்கிருந்து வெளியேறின.
இந்நிலையிலேயே, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
“நாட்டு மக்களின் அமைதியான போராட்டத்தை எந்த விதத்தில் சீர்குலைக்கும் எந்த முயற்சியையும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மிகுந்த கவலையுடன் பார்க்கிறது.
“அத்தகைய முயற்சிகள் நாடு, அதன் ஜனநாயகம், அதன் பொருளாதாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மக்களின் கருத்து சுதந்திரத்தை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துவதை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தது.