அரசு நிகழ்ச்சிகள், மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒருநாள் பயணமாக வரும் 24ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 24-ம் தேதி காலை டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு காலை 9.30 மணிக்கு வந்தடைகிறார்.
அங்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் என்.ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு உயரதிகாரிகள் அமித் ஷாவை வரவேற்கின்றனர்.
தொடர்ந்து அங்கிருந்து சாலை வழியாக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.
பின்னர் அங்கிருந்து சாலை வழியாக ஆளுநர் மாளிகை சென்று, மதிய உணவு அருந்துகிறார். தொடர்ந்து கம்பன் கலையரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் உள்துதை அமைச்சர் அமித் ஷா, பல திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
பின்னர் கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். தொடர்ந்து இந்திரா காந்தி சிலையருகே உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வரும் அமித் ஷா, அங்கு எம்எல்ஏக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, லாஸ்பேட்டை விமான நிலையம் சென்று டெல்லி புறப்படுகிறார்.