கடந்த 10 ஆண்டில் இறந்த மக்கள் நல பணியாளர் வாரிசுகளுக்கும் வேலை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

புதுடெல்லி: தமிழகத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர், கடந்த 2011ம் ஆண்டு பணியிலிருந்து அப்போதைய அதிமுக அரசால் நீக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விழுப்புரத்தை சேர்ந்த தன்ராஜ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், உச்ச நீதிமன்றத்தில் புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘தமிழகத்தில் சுமார் 12,524 கிராம பஞ்சாயத்துகளில் மக்கள் நலபணியாளர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.7,500 ஊதியம் வரும் வகையில் வேலை உறுதித் திட்டப் பணி கண்டிப்பாக வழங்கப்படும். பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகு கடந்த பத்து ஆண்டுகளில் இறந்து போன மக்கள் நலப்பணியாளர்களின் சட்டப்படியான வாரிசுகளுக்கும் வேலை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை உச்ச நீதிமன்றமும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.